சிபிஐ அறிக்கை ஏற்பு-வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட் ஏற்றுக் கொண்டு விட்டது.
இந்த நிலையில், சிபிஐ குற்றப் பத்திரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழ்நாட்டில் வக்கீல்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி நடந்த இந்த மோதல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி 2 வழக்குகளைப் பதிவு செய்தது.
அதில், 31 வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் மற்றும் 27 காவலர்கள் மீது குற்றம்சாட்டி, 6 குற்றப் பத்திரிகைகளை எழும்பூரில் உள்ள கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஜனவரி 12ம் தேதி சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தை எரித்த சம்பவத்தில் வக்கீல்களே காரணம் என்றும் கூறினர்.
இதையடுத்து வக்கீல்கள் கொந்தளித்தனர். சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக எழும்பூர் கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் முன்னிலையில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் திங்கள்கிழமை மனுக்களைத் தாக்கல் செய்தன.
அதில், சி.பி.ஐ.யின் குற்றப் பத்திரிகை ஒருதலைபட்சமாக உள்ளது. போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் வேண்டுமென்றே சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த குற்றப் பத்திரிகையை ஏற்கக் கூடாது கூறப்பட்டிருந்தது.
அதேசமயம், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை. இடைக்கால அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த குற்றப் பத்திரிகையை ஏற்க வேண்டும் என்று கோரப்பட்டது.
வாதங்களுக்குப் பின்னர் கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் கிள்ளிவளவன், சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தார்.
மேலும் வழக்கு விசாரணை பிப்ரவரி 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், சி.பி.ஐ.யின் குற்றப் பத்திரிகை தொடர்பாக விவாதிக்க வழக்கறிஞர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நேற்று கூடியது.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சிபிஐயின் குற்றப் பத்திரிகையை கண்டித்து வெள்ளிக்கிழமை (இன்று) ஒருநாள் மட்டும் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
அதன்படி இன்று வக்கீல்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications