இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. நாளை நள்ளிரவுக்குள் கட் அவுட்கள், போஸ்டர்களை அரசியல் கட்சிகள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இலங்கையில் ஜனவரி 26ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ராஜபக்சே, பொன்சேகா, சிவாஜிலிங்கம் உள்பட 22 பேர் போட்டியில் உள்ளனர். இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே அதிக அளவிலான வேட்பாளர்கள் போட்டியிடுவது இந்தத் தேர்தலில்தான்.
தேர்தல் பிரசாரத்தில் ராஜபக்சேவும், பொன்சேகாவும் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
பொன்சேகாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்கே கட்சி உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே பொன்சேகா வெற்றி பெறுவது உறுதி என சிங்கள மீடியாக்கள் கூறி வருகின்றன.
இரு தரப்பினரும் அனைத்து ஊடகங்கள் வழியாகவும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ள போதிலும், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
பொன்சேகா, ராஜபக்சே ஆகிய இருவருமே நமக்கு நல்லது பண்ணப் போவதில்லை. எனவே எதற்கு வாக்களிக்க வேண்டும் என்ற மன நிலையில் பெரும்பாலான தமிழர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழர்களின் வாக்குகள்தான் ஒருவரின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அணல் பறக்க நடந்து வரும் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.
மேலும், நாளை நள்ளிரவுக்குள் அரசியல் கட்சிகள் வைத்துள்ள கட் அவுட்கள், ஒட்டியுள்ள போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயகே உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து 26ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் 1,40,88,500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர். 50 சதவீத வாக்குகளைப் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
தமிழர் வாக்குகள் எத்தனை?
2008ம் ஆண்டு வாக்காளர் கணக்கெடுப்பின்படி, தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணத்தில் 7,21,357 வாக்காளர்களும், வன்னியில் 2,66,978 பேரும், திரிகோணமலையில், 2,41,133 பேரும், மட்டக்களப்பில் 3,33,644 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் யாழ்ப்பாணத்தில் தற்போது வெறும் 4 லட்சம் பேரே உயிருடன் இருப்பதாக தெரிகிறது. அதிலும் 2 லட்சம் பேர் வரை மட்டுமே வாக்களிக்கும் மன நிலையில் இருப்பதாக தெரிகிறது. இதிலும் கூட பெரும் அளவில் மாறுதல் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வன்னியில் உள்ள வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கும் மன நிலையில் இல்லையாம்.
கடந்த அதிபர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள், தமிழர்களை கேட்டுக் கொண்டனர். அதற்கேற்ப பெரும்பான்மையான தமிழர்களும் வாக்களிக்கவில்லை. ஆனால் இந்த முறை எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. இருப்பினும், தமிழர்களிடையே வாக்களிக்கும் ஆர்வம் சுத்தமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை காலையில் முடிவு...
தேர்தல் முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அடுத்த நாள் புதன்கிழமை காலை முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications