அரசுத் துறையில் 2 லட்சம் காலி பணியிடங்கள் - நிரப்ப கோரிக்கை
கடலூர்: தமிழக அரசு துறைகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்க மாநில பொதுச்செயலர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி விட்டதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், ஒப்பந்த முறையில் பணியாற்றிய 11 ஆயிரம் பேரில் நான்காயிரம் பேர் மட்டுமே நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
எஞ்சியுள்ளவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆனால், அரசு துறையில் 2.2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார்.
தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்களும், சார்பு நிறுவனங்களில் 6 லட்சம் பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் செயலாக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை அரசு இலவசம் என கூறிவிட்டு, மருத்துவமனையில் அனுமதித்தவுடன் 25 சதவீத கட்டணத்தைச் செலுத்துமாறு கூறுகிறது. எனவே, கட்டணமில்லா சிகிச்சை முறையை அமல்படுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து, ஜனவரி 28ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்றார்.












Click it and Unblock the Notifications