For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - பிரதீபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார்.

கோவையில் ஐந்து நாள் நடைபெற இருக்கும் செம்மொழி மாநாட்டிற்கான பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நேற்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் மாநாட்டு குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.

முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மாநாட்டு அரங்கமைப்பு, ஆய்வரங்க கருத்துகள், அழைக்க வேண்டிய சிறப்பு விருந்தினர்கள், தங்குமிட வசதிகள், ஊர்வலம் மற்றும் தமிழ் இணைய மாநாட்டுக்கான பணிகள் போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

கூட்டம் முடிந்ததும் முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி:

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு 41 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 2 ஆயிரத்து 803 பேர் இதுவரை பதிவு செய்து உள்ளனர்.

இந்தியாவில் இருந்து மட்டும் 2 ஆயிரத்து 430 பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். மலேசியாவில் இருந்து 102 பேரும், இலங்கையில் இருந்து 74 பேரும், சிங்கப்பூரில் இருந்து 69 பேரும், யு.எஸ்சில் இருந்து 32, இங்கிலாந்தில் இருந்து 13, கனடாவில் இருந்து 11, ஆஸ்திரேலியாவில் இருந்து 10 பேர் உட்பட வெளிநாட்டவர்கள் 373 பேர் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை வந்துள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை ஆயிரத்து 168. ஜூன் 23ம் தேதி மாலை ஊர்வலத்துடன் மாநாடு ஆரம்பம் ஆகிறது.

மாநாட்டை இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைக்க இசைவு தந்துள்ளார் என்றார் கருணாநிதி.

பின்னர், 'ஜெயலலிதாவை நேரில் அழைப்பீர்களா?' என்று கேட்டபோது, 'மாநாடு பற்றிய பேச்சு ஆரம்பித்த நேரத்திலேயே நான் சட்டமன்றத்திலே உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்து கடிதம் எழுதியிருந்தேனே!

இப்போது அவர்கள் வர ஒப்புக் கொள்வார்களா என்பதை நீங்களே கேட்டுச் சொல்லுங்கள்' என்று கருணாநிதி பதில் அளித்தார்.

மாநாட்டை ஒட்டி கோவையில் சிலை வைப்பதற்கான கோரிக்கை குறித்து அவர் கூறுகையில், 'கோவையில் ஏற்கனவே முக்கிய தலைவர்களுக்கு சிலைகள் இருக்கின்றன. இப்போதும் சிலைகள் பற்றி எங்கள் குழுவிலே ஆலோசித்து அது பற்றிய முடிவுகளை மேற்கொள்வோம்' என்றார்.

கோவை மாநாட்டிற்கு சிறப்பு பேருந்துகள் விடப்படுமா என்ற கேள்விக்கு, சிறப்பு விமானங்களே விடப்பட இருக்கின்றன. மாநாட்டிற்கிடையே நிரம்ப நேரம் இருக்கிறது. நானும் அடிக்கடி உங்களைச் சந்திக்கக் கூடியவன். எனவே பேருந்துகளைப் பற்றியெல்லாம் பிறகு பேசலாம் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X