விஜய்க்கு பத்மஸ்ரீ விருதா?

விரைவில் அரசியலில் குதிப்பேன் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் விஜய். அரசியலை மனதில் கொண்டு தனது ரசிகர் மன்றத்துக்கென தனி கொடியையும் வெளியிட்டார். தனது படங்களில் எல்லாம் தவறாமல் பன்ச் வசனம் வைத்து தனது எண்ணங்களை கொட்டியும் வருகிறார்.
உச்சகட்டமாக சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்று ராகுல் காந்தியையும் சந்தித்தார். ராகுல் காந்தி தமிழகம் வந்தபோது அவர் முன்பாக காங்கிரஸில் இணைவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் அதைத் தடுக்கும் வகையில் சென்னையில் சிலர், சில பல ரகசிய வேலைகளில் இறங்கியதால் அப்செட் ஆகி அரசியல் பிரவேசம் இப்போது இல்லை என்று அறிவித்து விட்டு ஆஃப் ஆகி விட்டார்.
இருந்தாலும் காங்கிரஸ் தரப்பு விஜய்யை வளைக்காமல் ஓயாது எனத் தெரிகிறது. அதை உறுதி செய்வது போல விஜய்க்கு பத்மஸ்ரீ விருது தர முடிவு செய்துள்ளதாக செய்திகள் அடிபடுகின்றன.
பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம விருதுகளில் பாரதரத்னா விருது மிக உயரிய விருதாகும்.
பத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகளும் பத்ம விருதுகளில் அடங்கும். இந்த விருதுக்காக ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் சிறந்த சேவையாளர்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அந்த பெயர்களை மத்திய அரசு பரிசீலித்து விருதுக்கு உரிய வர்களை தேர்வு செய்யும்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளுக்காக 20 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அவர்களில் இருந்து மூன்றில் ஒரு பங்கு பேர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில் நடிகர் விஜய் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
காங்கிரஸின் அன்பு வட்டத்திற்குள் விஜய் இருப்பதால் கண்டிப்பாக அவருக்கு இந்த விருது கிடைத்து விடும் என்று தெரிகிறது.
விஜய்க்கு பத்மஸ்ரீ என்று இப்போது பரபரப்பு கிளம்பியுள்ளதால், சுறா ரிலீஸின்போது மீண்டும் காங்கிரஸில் சேரும் படலத்தை அவர் ஆரம்பிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
பத்ம விருதுகளில் மிக உயர்ந்தது பாரத ரத்னா. இதற்கு அடுத்த விருது பத்ம விபூஷண். மூன்றாவது பெரிய விருது பத்ம பூஷண். நான்காவது விருது பத்மஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications