கல்யாணம் செய்த பின்னர் பெண்ணின் ஜாதி மாறி விடாது - மும்பை உயர்நீதிமன்றம்
மும்பை: கல்யாணம் செய்த பின்னர் பெண்களின் ஜாதி மாறி விடாது. அதே ஜாதியைச் சேர்ந்தவர்களாகத்தான் அவர்களைக் கருத வேண்டும் என்று பாம்பே உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை அளித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த ராஜேந்திர ஸ்ரீவத்சவா என்பவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனைவி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். கணவரும், கணவர் வீட்டாரும் தன்னை ஜாதி ரீதியாகவும், வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்துவதாக போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இதனால் இந்த முன்ஜாமீன் மனுவை ஸ்ரீவத்சவா தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம்,
ஒரு பெண் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலோ அல்லது பழங்குடியின வகுப்பில் பிறந்திருந்தாலோ, கடைசி வரை அவர் அந்த வகுப்பைச் சேர்ந்தவர்தான். இடையில் கல்யாணம் நடந்தாலும், அவர் அதே ஜாதி அடையாளத்துடன்தான் பார்க்கப்பட வேண்டும். முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைக் கல்யாணம் செய்ததற்காக அந்தப் பெண்ணையும் முற்பட்ட வகுப்பினராக பார்க்க முடியாது.
தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரே காரணத்திற்காக அந்த வகுப்பைச் சேர்ந்த ஆண்களும் சரி, பெண்களும் சரி பல்வேறு சிக்கல்களை இந்த சமுதாயத்தில் சந்திக்க நேரிடுகிறது. ஒரு திருமணத்தால் இந்த அவலங்களை துடைத்து விட்டதாக கூறி விட முடியாது.
திருமணம் ஆனாலும், ஆகாவிட்டாலும், அந்தப் பெண் எந்த ஜாதியைச் சேர்ந்தவரோ கடைசி வரை அதே ஜாதி அடையாளத்துடன் அவர் இருப்பார். எனவே இந்த வழக்கில் மனுதாரரின் மனைவியின் குற்றச்சாட்டை தள்ளி விட முடியாது என்று கூறி முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications