வரும் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும்-இ.கம்யூ
மதுரை: அதிமுகவுடனான கூட்டணி வரும் தேர்தலிலும் நீடிக்கும் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன்
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும்.
அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உறவு நீடிக்கிறது. வருகிற தேர்தலிலும் அதிமுகவுடன் உறவு நீடிக்கும். பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதே எங்களது நோக்கம்.
கடந்த ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பணவீக்கம் இந்தியாவில் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 9 சதவீதமாக பண வீக்கம் அதிகரித்து விட்டதாக மத்திய நிதித்துறை ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் உணவு பொருள் விலைவாசி ஏற்றம் கடந்த 11 மாதத்தில் 21 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
வரும் பட்ஜெட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறுவது நம்பத் தகுந்ததல்ல. கடந்த 1 வருடத்தில் படிப்படியாக விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி வருகிற மார்ச் 5ம் தேதி இந்திய கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். மார்ச் 12ம் தேதி டெல்லியில் கண்டன பேரணி நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் சமூக விரோத செயல்கள் அரசு ஆதரவுடனும், போலீசார் துணையுடனும் நடைபெற்று வருகிறது. இதனால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகியவை அதிகரித்துள்ளன. சென்னை அசோக்நகரில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 கொலைகள் நடந்துள்ளது.
144 தனியார் நிதி நிறுவனங்கள் மோசடி வழக்கின் பொருளியல் குற்றத்திற்காக தடை செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்த தொகை 2220 கோடி ஆகும். இதே போன்று போலி ஆவணங்கள் தயாரித்து தமிழ் நாட்டில் மட்டும் 26000 ஏக்கர் நிலம் மோசடியில் சிக்குண்டுள்ளது.
நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கு மத்திய அரசு தான் அங்கீகாரம் அளித்தது. மத்திய அரசே அங்கீகாரத்தை பறிப்பது வினோதமானது. எனவே இதில் மத்திய அரசும் ஒரு குற்றவாளிதான்.
கேரளா அரசு புதிய அணை கட்ட, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிய வருகின்றது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும், திமுக இந்த செயலுக்கு எப்படி அனுமதி அளித்தது? என்றார் தா.பாண்டியன்.












Click it and Unblock the Notifications