ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்து பரிசீலிக்க உத்தரவு

பாமகவைச் சேர்ந்த சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை சார்பில் அதன் தலைவர் கே.பாலு தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாலு தாக்கல் செய்திருந்த மனுவில்,
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 6 முறையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரியான தகவல்கள் பதிவு செய்யப்படவில்லை.
இதன் காரணமாக, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அமைக்கப்பட்ட 3 தேசிய கமிஷன்களும் பிற்படுத்தப்பட்ட சாதியினரைக் கண்டறிய முடியவில்லை.
அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக மக்கள் எவ்வாறு பின்தங்கியுள்ளனர் என்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு திட்டங்களைத் தீட்டுவதற்கு இந்த புள்ளிவிவரங்கள் அவசியமாகின்றன.
ஒரு குறிப்பிட்ட சாதியில் படித்தவர்கள், டாக்டர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கையை அறியாமல், அந்த சாதியினர் பின்தங்கியுள்ளனரா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியாது.
அதேபோல், இந்தத் தகவல்கள் இல்லாமல் முன்னேறிய சாதியினரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கவும் முடியாது.
சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 24.10.08}ல் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
இதுதொடர்பாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர், உள்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோரின் விவரங்கள் சாதிவாரியாக கணக்கெடுக்கப்படுகிறது. அதேபோல, இதர பிற்படுத்தப்பட்டோரின் விவரங்களும் சாதிவாரியாகக் கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் பாலு.
இந்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் சமூக நீதித்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்துறையின் உத்தரவு கிடைத்தபிறகே நடவடிக்கை எடுக்க முடியும்'' என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தக் கோரி வழக்கறிஞர் கே.பாலு அளித்த மனுவை மிகுந்த கவனத்தோடு பரிசீலித்து 8 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications