85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?

இன்று அதிகாலையில், பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய ஐந்து நிமிடங்களில் இந்த விமானம் விபத்தில் சிக்கியது.
விமானம் கிளம்பிய ஐந்து நிமிடத்திலேயே அது ரேடாரின் கண்களிலிருந்து மறைந்தது. விபத்துக்குள்ளான விமானம் போயிங் 737 ரக விமானம் எனக் கூறப்படுகிறது.
விமானத்தில் இருந்த பயணிகளில் 50 பேர் லெபனான் நாட்டவர் ஆவர். மற்றவர்கள் எத்தியோப்பியர்கள் எனத் தெரிகிறது. 7 பேர் விமான ஊழியர்கள் ஆவர்.
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு இந்த விமானம் கிளம்பியது.
விமானம் தீப்பிடித்த நிலையில் கடலில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதில் இருந்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது.
ஈரான் விமானத்தில் தீ: 46 பேர் காயம்..
இதற்கிடையே ஈரானின் வடகிழக்கு நகரான மஷ்ஹத் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய விமானம் ஒன்றில் தீப் பிடித்தது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 46 பேர் காயமடைந்தனர்.
விமானத்தின் பின் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அதில் 157 பயணிகளும், 13 விமான பணியாளர்களும் இருந்தனர்.
டுபோலேவ் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. தீ விபத்தில் விமானம் பெருக்க சேதமடைந்தது.
ஈரானின் விமானங்கள் சமீபகாலமாக அடிக்கடி விபத்தை சந்தித்து வருகின்றன. இதற்கு பராமரிப்புக் குறைபாடே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளால் ஈரானால் கடந்த 20 ஆண்டுகளாக புதிய விமானங்களை வாங்க முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications