குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்- சோனியா காந்தி

டெல்லியில் நேற்று நடந்த தேர்தல் ஆணைய வைர விழா தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பண பலம் மற்றும் ஆள் பலம் ஆகியவற்றின் ஆதிக்கம் தேர்தல்களில் அதிகரித்து வருவதை நாம் சந்தித்து சமாளிக்க வேண்டியுள்ளது. அதேபோல, குற்றவாளிகளும், குற்றப் பின்னணி உடையவர்களும் தேர்தலில் போட்டியிடுவதையும் நாம் தடுக்க வேண்டும்.
இவர்கள் எப்படி தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பது என்பது குறித்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.
சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பேசுகையில், தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள சீர்திருத்த நடவடிக்கைள் குறித்த ஒரு தேசிய அளவிலான கலந்துரையாடலை வருகிற ஜூன் மாதம் மத்திய அரசு நடத்தவுள்ளது.
இதற்கு முன்பு இருந்த சட்ட அமைச்சர்கள் தேர்தல் சீர்திருத்தம் குறித்து அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையே காணப்பட்டது. ஆனால் தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் சீர்திருத்தத்தில் உறுதியாக இருப்பதால் இம்முறை அதுபோன்ற ஏமாற்றங்கள் ஏற்படாது என நம்புகிறேன் என்றார்.
பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், நல்ல மனம் படைத்தோர் அரசியலுக்கு வர விரும்புவதில்லை. அரசியலை தூய்மைப்படுத்தும் பணிகளில் யாருக்கும் அக்கறையும் இல்லாத நிலை காணப்படுகிறது. எனவே அர்த்தமில்லாத கொள்கைகளுடன் கூடியவர்கள், மக்கள் ஆதரவு இல்லாதவர்களும் கூட தேர்தலில் நின்று ஜெயிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது என்றார்.
நேற்றைய நிகழ்ச்சியில் எதிரும் புதிருமாக உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அருகருகே அமர்ந்திருந்தது வித்தியாசமான காட்சியாக இருந்தது.
மமதா பானர்ஜிக்கு, பிரகாஷ் காரத் அருகே சீட் போடப்பட்டிருந்தது. ஆனால் அவர் அமர மறுக்கவே வேறு இடத்தில் சீட் ஒதுக்கப்பட்டு அங்கு அமர்ந்தார்.
ஜெயலலிதா, தேவெகெளடா மற்றும் சரத் பவாருக்கு நடுவில் அமர்ந்திருந்தார்.












Click it and Unblock the Notifications