கசாப்பின் அடுத்த 'அட்டாக்'-சர்வதேச கோர்ட்டில் விசாரிக்க வேண்டுமாம்!
மும்பை: வர வர கசாப் செய்யும் குறும்புகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. சினிமாவில் நடிக்க வந்தேன் என்று ஆரம்பித்து ஏகப்பட்ட அலேக் வாக்குமூலத்தை அளித்து வரும் அவன் தற்போது மும்பை தாக்குதல் வழக்கை சர்வதேச கோர்ட்டில் வைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளான்.
ஆனால் அவனது இந்தக் கோரிக்கையை மும்பை தனி கோர்ட் உடனடியாக நிராகரித்து விட்டது.
நீதிபதி தஹிளியானி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கசாப் நீதிபதியிடம் இந்தக் கோரிக்கையை வைத்தான்.
இதையடுத்து நீதிபதி கூறுகையில், வழக்கு இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது. இந்த நேரத்தில் இப்படிப்பட்ட கோரிக்கையை வைக்க முடியாது. விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வெளியான பின்னர்தான் இதுபோன்ற கோரிக்கையை வைக்க முடியும் என்று கூறி கசாப்பின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
இதையடுத்து அடுத்த அட்டாக்கை ஆரம்பித்தான் கசாப். பாகிஸ்தானில் எனக்கு சில சாட்சிகள் உள்ளனர். அவர்களை விசாரிக்க வேண்டும். எனவே பாகிஸ்தான் அரசை என்னுடன் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யுங்கள். அவர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர் அந்த சாட்சிகளை இங்கு வரவழைக்க வேண்டும் என்றான் கசாப்.
இதைக் கேட்ட நீதிபதி, முதலில் பாகிஸ்தானில் உள்ள உனக்கு ஆதரவான சாட்சிகள் யார் என்பதைச் சொல். அவர்களின் முகவரியையும் கொடு. அதுகுறித்து அரசுத் தரப்பு விசாரணை நடத்தி ஏற்பாடு செய்யும் என்றார்.
ஆனால் பெயர்களைக் கூற மறுத்து விட்டான் கசாப். பாகிஸ்தான் அரசுடன் பேசிய பிறகுதான் இதைக் கூறுவேன். முதலில் பாகிஸ்தான் அரசை என்னுடன் தொடர்பு கொள்ளக் கூறுங்கள் என்றான் தடாலடியாக. இருப்பினும் இதை நீதிபதி ஏற்கவில்லை.












Click it and Unblock the Notifications