இரண்டாவது பசுமைப் புரட்சி வர வேண்டும்-பிரதீபா பாட்டீல்
டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, உணவுப் பஞ்சத்தைப் போக்க 2வது பசுமைப் புரட்சி அவசியமாகியுள்ளது என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.
நாட்டின் 60வது குடியரசு தினத்தையொட்டி தொலைக்காட்சி மூலம் அவர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
குடியரசுத் தலைவரின் உரை...
நாட்டில் பெருகி வரும் விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை, விவசாயப் பணிகளின் வீழ்ச்சி ஆகியவற்றை சமாளிக்க 2வது பசுமைப் புரட்சி வர வேண்டியது அவசியமாகும்.
இதன் மூலம் விலைவாசி உயர்வைக் குறைத்து உணவுப் பொருள் பற்றாக்குறையைத் தீர்க்க முடியும். விவசாயத் துறையில் நவீனங்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்து பெருமளவில் மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகியுள்ளது. இது அவசரத் தேவையும் கூட.
விவசாயப் பொருளாதாரத்தை மேலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய அவசரம் வந்துள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள், சிறந்த விதைகள், மேம்படுத்தப்பட்ட விவசாய முறைகள், சிறப்பான நீர் மேலாண்மை ஆகியவை அவசியமாகியுள்ளது.
உயர்ந்த விவசாய வருவாய் மூலம், கோடிக்கணக்கான விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் இந்தியா, இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டும் நோக்கில் வேகமாக நடைபோட்டு வருகிறது.
வளர்ச்சி இலக்கை எட்டும் அதே நேரத்தில் சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களின் உயர்வையும் நாம் மனதில் கொண்டாக வேண்டும். அவர்களும் பொருளாதார ஏணியில் பீடு நடை போட்டு ஏற வகை செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அது தொடர்பான கவலைகளும் இன்று உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக புவிவெப்ப மாற்றம் இன்று நம் முன் உள்ள மிகப் பெரும் கவலையளிக்கும் அம்சமாகும். புகை மாசுக் குறைப்பு தொடர்பான நடவடிக்கைகளில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
உள்நாட்டுப் பாதுகாப்புக்கு இன்று பெரும் சவால்கள் எழுந்துள்ளன. இதை சமாளிக்க உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் அந்த சவால்களை திறம்பட முறியடித்து எதிரிகளை வெல்ல வகை செய்யும் என்றார் பிரதீபா பாட்டீல்.












Click it and Unblock the Notifications