எஸ்ஐ கொலை: மேலு்ம் இருவர் கைது-5 பேருக்கு வலை
நெல்லை: ஆழ்வார்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ வெற்றிவேல் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் இன்னும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ வெற்றிவேல் கடந்த 7ம் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார்.
கடையம் போலீஸ் எஸ்.ஐ சிவசுப்பிரமணியனை அவருடைய மனைவி சிவகாமி மற்றும் குடும்பத்தார் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும், இதில் தவறுதலாக வெற்றிவேல் பலியானதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமி, அவருடைய உறவினரும், ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருமான சண்முகசுந்தரம், மைத்துனர் கந்தசாமி, கள்ளபிரான், அய்யப்பன் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
மேலும் தேடப்பட்ட, சிவகாமியின் அண்ணன்கள் சுப்பிரமணியன், கண்ணன் மற்றும் இன்ஜினீயர் முருகன், சுரேஷ் ஆகியோரும் சரண் அடைந்துள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 9 பேர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பேச்சிமுத்து மகன் ராதா என்ற ராதாகிருஷ்ணன் (26), சுப்பையா மகன் முருகேசன் (40) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன், முருகேசன் ஆகியோரை போலீசார் அம்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலீசார் அவர்களை போலீசார் பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இவ்வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் தேடிவருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ரா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications