குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு

இந்தியா தனது குடியரசு தினத்தை இன்று கொண்டாடுகிறது. வழக்கம் போல பெரும் உற்சாகத்துடன் தேசியக் கொடிகளை ஏற்றி நாட்டு மக்கள் குடியரசு தினத்தைக் கொண்டாடினர்.
தலைநகர் டெல்லியில் கடும் பனி மூட்டத்திற்கு மத்தியிலும் குடியரசு தின விழா களை கட்டியது. காலை போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினரிடம் அசோக் சக்ரா விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியி்ல் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள், சிறப்பு விருந்தினரான தென் கொரிய அதிபர் லீ மியூங் பாக், பல நாட்டு தூதர்கள், சோனியா, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு தொடங்கியது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ரதங்கள், பல்வேறு மாநில கலைக்குழுக்களின் கண்கவர் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
அணிவகுப்பு நடந்த 8 கிலோ மீட்டர் தூர பாதை முழுவதும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். விமானப் படை ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து கண்காணித்தன. 105 கண்காணிப்பு கேமராக்களை வைத்து அனைத்து பகுதிகளையும் கண்காணித்தனர்.
கடும் பனி மூட்டம் காரணம்க 100 மீட்டர் தூரம் வரையே எதிரில் இருக்கும் பொருட்கள் தெரிந்தன. இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி விடக்கூடாது என்பதால் போலீசார் மிக எச்சரிக்கையாக இருந்தனர்.
குடியரசு தின விழாவில் போர் விமானங்களின் சாகஸ நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பனி மூட்டம் இருந்ததால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
பலத்த பாதுகாப்பு:
குடியரசு தின அணிவகுப்பின்போது நாச வேலைகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கும் சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விஜய் சவுக் முதல் செங்கோட்டை வரையிலான பாதை நெடுகிலும் 18,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அணிவகுப்பைக் காண கடும் குளிர், பனி மூட்டத்தையும் பொருட்படுத்தாமல் செங்கோட்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.
பர்னாலா கொடியேற்றினார்:
சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் மாநில ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது கடலோரக் காவல்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து மலர் தூவியது.
கடற்கரை சாலையில் நடந்த இந்த விழாவில் முப்படை வீரர்கள் அணிவகுப்பு நடந்தது. அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வந்தன.
தொடர்ந்து வீர தீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. வேன் விபத்தில் பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த நாகப்பட்டினம் ஆசிரியைக்கான விருதை அவரது தந்தை மாரியப்பன் பெற்றுக்கொண்டார்.
ஆற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப உதவியாளரான மதுரையைச் சேர்ந்த கண்ணனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
மதநல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது பேகம்பூர் மொய்தீனுக்கு வழங்கப்பட்டது.
மதுவிலக்கை சிறப்பாக அமல்படுத்தியதற்கான உத்தமர் காந்தி அடிகள் காவலர் பதக்கம் திருச்சி மாவட்ட அமலாக்க பிரிவு கூடுதல் சூப்பிரண்டு நாகராஜன், தர்மபுரி மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு விவேகானந்தன், டி.எஸ்.பி.சீனிவாசன், விழுப்புரம் இன்ஸ்பெக்டர் தெய்வசி காமணி ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியைக் காண பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.
மாவட்டத் தலைநகரங்களில்...
இதேபோல மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications