ஸ்ரீபெரும்புதூரில் அடுத்தடுத்து 2 கொலைகள்-பீதி- கடைகள் அடைப்பு
ஸ்ரீபெரும்புதூர்: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நேற்றும், இன்றும் அடுத்தடுத்து இரு கொலைகள் நடந்துள்ளன. இதனால் அங்கு பெரும் பீதியும், பதட்டமும் நிலவுகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி கிராமத்தில் வசித்து வந்தவர் கோமகன் (38). இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சீபுரம் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
நேற்று மாலை கோமகன், நெமிலியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு முட்புதரில் மறைந்திருந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல், வீச்சரிவாளால், சரமாரியாக கோமகனை வெட்டி சாய்த்தது.
இதில் கோமகனின் கழுத்து, தலை, முகம், மார்பு ஆகிய பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
நெமிலி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கோமகனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மர்ம கும்பல், கோமகனை படுகொலை செய்துள்ளது.
கொலை செய்யப்பட்ட கோமகன் பிணத்தை, பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
தகவல் கிடைத்ததும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று கோமகன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கோமகனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கொலை காரணமாக, ஸ்ரீபெரும்புதூரில் நேற்று மாலையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
கோமகனுக்கு மேனகாதேவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கொலை காரணமாக பெரும் பதட்டம் ஏற்பட்டதால் பெருமளவிலான போலீஸார் நெமிலி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் குவிக்கப்பட்டனர்.
கொன்ற கும்பலைச் சேர்ந்தவரின் தந்தை இன்று கொலை...
இந்த நிலையில், கோமகனைக் கொன்ற கும்பலைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் தந்தையான கண்ணப்பன் (70) இன்று காலை வெட்டிக் கொல்லப்பட்டார்.
இவரை கோமகன் தரப்பினர் கொன்றதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஸ்ரீபெரும்புதூரில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications