நில ஊழலில் சிக்கிய 4 ராணுவ அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அந்தோணி உத்தரவு
டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நில ஊழல் சர்ச்சையில் சிக்கிய நான்கு ராணுவ உயர் அதிகாரிகள் மீது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம் என்ற ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூரின் பரிந்துரையை நிராகரித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, நால்வர் மீதும் ராணுவ கோர்ட்டில் விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா ராணுவ தளத்தை ஒட்டி உள்ள 71 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்தது.
இதில் ராணுவச் செயலாளர் லெப்டினென்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷ், அவருக்குக் கீழ் பணியாற்றி வரும் லெப்டினென்ட் ஜெனரல் பி.கே.ரத், லெப்டினென்ட் ஜெனரல் ரமேஷ் ஹல்கலி, மேஜர் ஜெனரல் பி.சென் ஆகியோர் சிக்கினர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூர், நான்கு பேர் மீதும் நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுத்தால் போதும் என பரிந்துரைத்தார்.
ஆனால் இதை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி நிராகரித்து விட்டார். மாறாக நான்கு பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
அவதேஷ் பிரகாஷ், தீபக் கபூருக்கு மிகவும் நெருங்கியவர் என்று கூறப்படுகிறது. இதனால்தான் பிரகாஷைக் காக்கும் நோக்கில் மென்மையாக செயல்பட்டார் தீபக் கபூர் எனக் கூறப்படுகிறது.
தீபக் கபூர் மார்ச் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதேசமயம், அவதேஷ் பிரகாஷ் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் நான்கு அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டார்ஜீலிங்கின் சுக்னா என்ற இடத்தில் உள்ள ராணுவத் தலைமையகம் அருகே கல்வி நிலையம் அமைக்க சிலிகுரியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த அனுமதி வழங்கப்பட்டதில் பெரும் ஊழலும், பணப் பரிமாற்றமும் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன என்பது நினைவிருக்கலாம்.
பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து நான்கு அதிகாரிகள் மீதும் ராணுவ கோர்ட் விசாரணை தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications