சலுகை விலையில் கார் ஆசை காட்டி பல கோடி ரூபாய் மோசடி!
சென்னை: எத்தனை முறை ஏமாந்தாலும், சலுகை என்ற வார்த்தையைக் கேட்டதும் அதையெல்லாம் மறந்துவிடுகிறார்கள் மக்கள்.
சலுகை விலையில் கார் வங்கித் தருகிறோம் என்று அறிவித்த உடனே எய்ம் லிமோசின் என்ற நிறுவனத்தில் ஏராளமானோர் பணம் கட்டி ஏமாந்துள்ளனர். இப்போது வழக்கம்போல போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
சென்னை தியாகராயநகரில் உள்ளது 'எய்ம் லிமோசின்ஸ்' என்ற நிறவனம். இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது.
இந்த நிறுவனத்தின் மீது நேற்று ஆண்களும், பெண்களுமாக 20 பேர் திரண்டு வந்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனுக்களைக் கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
இந்தியா முழுவதிலும் கிளைகளை வைத்துள்ள இந்த எய்ம் லிமோசின். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலும் கிளைகள் உள்ளன.
ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கட்டினால் மாதம் ரூ.7 ஆயிரம் வீதம் 5 வருடங்களுக்கு கமிஷன் தொகை கிடைக்கும் என்றும், 5 வருட முடிவில் 'டாடா இன்டிகா' கார் ஒன்று இலவசமாக கிடைக்கும் என்றும், இதேபோல ரூ.85 ஆயிரம் கட்டினால் மாதம் ரூ.6,500 வீதம் கமிஷன் தொகை 3 வருடங்களுக்கு கிடைக்கும் என்றும், 3 வருட முடிவில் கார் ஒன்று இலவசமாக கிடைக்கும் என்றும் விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.
இதை நம்பி பணம் கட்டினோம். ஆனால், நான்கைந்து மாதங்கள் மட்டும் கமிஷன் தொகையை தந்தார்கள். அதன்பிறகு கமிஷன் தொகையும் தரவில்லை, காரும் கொடுக்கவில்லை' என்று கூறியிருந்தனர்.
இதுபோல் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பேரிடம் பணம் வசூலித்து பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதையடுத்து, சென்னை மாநகர கமிஷனர் ராஜேந்திரன் உத்திரவின்பேரில் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications