பென்னாகரம்- ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை: இடைத் தேர்தலுக்காக காத்திருக்கும் பென்னாகரம் சட்டசபைத் தொகுதியில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் உள்ள பாப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிவசேகர், தங்கதுரை, பழனி உள்ளிட்ட 7 பேர் பல்வேறு மாவட்டங்களுக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.
வன்னியர் சமூகத்தை சேர்ந்த இவர்கள் தங்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. வக்கீல் பாலு மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், பென்னாகரம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். வன்னியர் சமூகத்தினர் அதிகம் வாழும் இங்கு அதே சமூகத்தை சேர்ந்த 7 ஆசிரியர்களை எந்த காரணமும் இன்றி திடீரென இடமாற்றம் செய்துள்ளனர்.
இதற்கு முறைப்படியான கவுன்சிலிங் நடத்தவில்லை. இந்த விஷயத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசியல் பின்னணி கொண்ட இடமாற்றத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆசிரியர்களை ஏன் திடீர் இடமாற்றம் செய்தார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அரசின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்-தா.பா:
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்,
பென்னாகரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வாக்காளர் பட்டியலை முறைப்படி குறுகிய காலத்துக்குள் தயாரித்து, மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கு பல ஊர்களுக்கு யாரும் வரவில்லை என்று ஊராட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.
எனவே, வாக்காளர் பட்டியல் முறையாக சரிபார்த்த பின்புதான் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications