இஸ்ரேல் பெண் தலைமை நீதிபதி மீது ஷூ வீச்சு!
இஸ்ரேல் சுப்ரீம் கோர்ட்டில் போதைப் பொருள் கடத்தல் குறித்த வழக்கை தலைமை நீதிபதி டோரிட் பெயினிஸ்ச் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நேர் எதிரே இருந்த ஒரு நபர் தனது டென்னிஸ் ஷூக்களை கழற்றி நீதிபதியை நோக்கி வீசினார்.
அதில் முதல் ஷூ நீதிபதியை தாக்கியது. இதில் அவர் தடுமாறி இருக்கையிலிருந்து விழுந்து விட்டார். அதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்து போனது.
அடுத்த ஷூ மேலே படாமல் போய் விழுந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஷூவை வீசிய நபரை பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்து வெளியே கொண்டு சென்றனர். நீதிபதியும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். சில மணி நேரங்களுக்குப் பின்னர் மீண்டும் கோர்ட் அறைக்குத் திரும்பி பணிகளைப் பார்த்தார்.
ஷூவை வீசிய நபரின் பெயர் பின்சாஸ் கோஹன் (52) எனத் தெரிய வந்துள்ளது. நீதிபதியை நோக்கி ஷூவை வீசியபோது, நீ ஒரு ஊழல் பெருச்சாளி, துரோகி, உன்னால்தான் அனைத்தையும் இழந்தேன் என்று ஆவேசமாக கத்தினார் கோஹன்.
ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு இவர் ஒரு நீதிபதியை மிரட்டிய விஷயம் தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோஹனை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
அல் ஜெய்தி ஆரம்பித்து வைத்தது...
இந்த ஷூ வீச்சுப் படலம் இப்போது உலகம் முழுவதும் பேஷனாகி விட்டது. 2008ம் ஆண்டு பாக்தாத் நகருக்கு ஜார்ஜ் புஷ் வந்தபோது அவரை நோக்கி முன்டாசர் அல் ஜெய்தி என்ற ஈராக்கிய பத்திரிக்கையாளர் ஷூக்களை வீசி உலகை அதிர வைத்தார். அன்று ஆரம்பித்த இந்த ஷூ வீச்சு பழக்கம் பல நாடுகளுக்கும் போய் இப்போது இஸ்ரேல் வரை வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications