மும்பை யாருக்கும் சொந்தமல்ல - அனைவருக்கும் உரியது: முகேஷ் அம்பானி

லண்டன் பொருளாதாரப் பள்ளியில், ராஜ்யசபா எம்.பி. என்.கே.சிங்கின் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசினார் முகேஷ் அம்பானி.
அப்போது அவர் கூறுகையில், மராத்தி மொழி பேசுவோருக்கே டாக்சி உரிமம் என்ற சர்ச்சை தேவையில்லாதது. துரதிர்ஷ்டவசமானது.
முதலில் நாம் எல்லோரும் இந்தியர்கள். மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்கள் அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானது. இதுதான் உண்மை.
பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு லைசன்ஸ் ராஜ்யத்தை விட்டு இந்தியாவின் தொழில் துறை விலகி போய் விட்டது. இந்த நிலையில், மும்பையின் டாக்சி டிரைவர்கள் இன்னும் அந்த வலையிலிருந்து மீளாமல் இருப்பது, மீட்கப்படாமல் இருப்பது வேதனை தருகிறது.
அடுத்தாண்டுக்குள், 15 முதல் 20 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியுமா என்பதுதான் இந்தியாவின் இப்போதைய முக்கியக் கவலை - மராத்தி பேசினால்தான் டாக்சி உரிமம் என்ற பிரச்சினை அல்ல. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் நம் முன் உள்ள நிஜமான சவால்.
வரும் ஆண்டுகளிலும் வேலைவாய்ப்புகள்தான் பெரும் பிரச்சினையாக, சவாலாக இருக்கப் போகிறது. அந்த வேகத்திற்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாத நிலைதான் தற்போது காணப்படுகிறது.
வெளிநாடுகளில் செட்டிலாகி விட்ட இந்தியர்கள் தற்போது தாயகம் நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்தியாவிலேயே தங்களது சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்து விட்டது.
அடுத்த 20 ஆண்டுகளில் நாடு திரும்பும் இந்தியத் தொழிலதிபர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் இங்கு பெரும் வாய்ப்புகள் ஏற்படும் நிலை உருவாகி விடும். இது இந்தியாவிலேயே வசித்து வரும் கோடிக்கணக்கானோருக்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் முகேஷ்.
முகேஷ் பேசி முடித்ததும் ஏராளமான மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர், ஆட்டோகிராப் வாங்கினர். மகிழ்ச்சியாக போஸ் கொடுத்த, ஆட்டோகிராப் போட்ட முகேஷ், அனைவரும் கட்டாயம் மும்பைக்கு வர வேண்டும் என்று சொல்லியபடி விடைபெற்றார்.












Click it and Unblock the Notifications