தென் மாவட்டங்களில் பரவி வரும் காய்ச்சல் சிக்குன்குனியா- தமிழக அரசு

இது சிக்குன்குனியா அல்லது டெங்கு வகை காய்ச்சல்தான் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் தமிழக அரசு அதுகுறித்து விளக்கம் தரவில்லை.
ஆனால் உயிர்ப்பலி அதிகரித்தபடி இருந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு சுதாரித்து களத்தில் இறங்கியது. தற்போது இது சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல்தான் என்று தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் பகுதியில்தான் இந்த மர்மக் காய்ச்சல் மிக மோசமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய முகாம் அமைக்கப்பட்டது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 480 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் இது சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் எனத் தெரிய வந்தது.
இதுகுறித்து அமைச்சர் பன்னீர் செல்வம் கூறுகையில், சோதனையில் இது சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல்தான் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு போதுமான மருந்துகள் அரசிடம் உள்ளது. எனவே பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்றார்.
மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் கூட சிக்குன்குனியா காய்ச்சல் மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.
முன்னதாக வேகமாக பரவி வரும் இந்த மர்மக் காய்ச்சல் குறித்து மக்களிடையே பீதி ஏற்பட்டது. வெளிநாட்டு பயணிகளின் மூலம் வந்த புதிய வகை வைரஸ் காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்தது. இதுதொடர்பாக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில்தான் பரவி வரும் மர்மக் காய்ச்சல் சிக்குன்குனியா, டெங்கு என தமிழக அரசு கூறியுள்ளது.
உகாண்டா, சூடான் நாடுகளில் உள்ள நொயாங் காய்ச்சல், ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு பசிபிக் நாடுகளில் காணப்படும் ரோஸ் ரிவர் காய்ச்சல் மற்றும் எகிப்து நாடுகளில் அறியப்படும் சின்ட்பிஸ் போன்ற காய்ச்சலுக்கும் தமிழகத்தில் பரவியுள்ள காய்ச்சலுக்கும் ஒற்றுமை இருப்பதாக முன்பு கூறப்பட்டது.
இந்த 3 வகைகளில் ஏதேனும் ஒன்று தமிழகத்தில் பரவியிருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு மையங்களுக்கும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை கிங் இன்ஸ்டியூட் ஆய்வாளர்கள் ரத்த மாதிரியை சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் கூட அனுப்பி வைத்தனர்.
அதே போல மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நோய் விவரங்களை குறிப்பிட்டு அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்துக்கு அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications