இலங்கை அதிபர் தேர்தல் நியாயமாக நடந்ததா? தேர்தல் ஆணையர் விலகல் அறிவிப்பால் எழும் சந்தேகம்!

இலங்கை தேர்தல் ஆணையராக இருப்பவர் திஸநாயகே. தேர்தல் பிரசாரத்தின்போதே, அரசுத் தரப்பிலிருந்து பலவிதமான நெருக்கடிகள் இவருக்குக் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் வெறுத்துப் போன திஸநாயகே, தேர்தல் முடிந்ததும் பதவி விலகுவார் என கூறப்பட்டது.
அதற்கேற்ப தான் பதவி விலக விரும்புவதாக திஸநாயகே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தலின்போது பல கடுமையான நெருக்குதல்களையும், சிரமங்களையும் நான் எதிர்கொள்ள நேரிட்டது. இந்தப் பதவியில் நான் நீடிக்க விரும்பவில்லை.
தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்று நான் அரசு மீடியாக்களுக்குப் பிறப்பித்த உத்தரவை அவர்கள் கொஞ்சம் கூட மதிக்கவில்லை. முற்றிலும் விதிமுறைகளுக்குப் புறம்பாக அவர்கள் நடந்து கொண்டனர்.
புத்தளம், அனுராதபுரம், மாத்தளே பகுதிகளில் தேர்தல் நடைமுறைகளை அமல்படுத்த விடாமல் தேர்தல் பணியாளர்களும், அதிகாரிகளும் தடுக்கப்பட்டனர், மிரட்டப்பட்டனர்.
இந்தப் பதவியில் இனியும் நீடிப்பது பொருத்தமாக இருக்காது என கருதுகிறேன்.
இதற்கு மேலும் என்னால் நெருக்குதல்களை சமாளிக்க முடியாது, ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே என்னை எவ்வளவு விரைவாக இந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக விடுவித்தால் நலம் என்று கூறியுள்ளார் திஸநாயகே.
திஸநாயகேவின் இந்தக் குற்றச்சாட்டு, அதிபர் தேர்தல் நடந்த விதம் பல்வேறு கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது. உண்மையிலேயே முறையாகத்தான் தேர்தல் நடந்ததா அல்லது அரசுத் தரப்பே தனது கையில் தேர்தலை எடுத்துக் கொண்டு தாறுமாறாக முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றியைப் பறித்துக் கொண்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெருமளவிலான தமிழர்களுக்கு வாக்காளர் அட்டைகளே தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அதேபோல வாக்குப் பதிவு நாளன்று தமிழர்கள் வாக்களிக்கச் செல்லாமல் தடுக்கும் வகையில் பஸ் போக்குவரத்தை நிறுத்தி அவர்களை மறைமுகமாக தடுத்து விட்டனர்.
இதுதவிர சிங்களப் பகுதிகளில் பொன்சேகாவுக்கு இருந்து வந்த ஆதரவை அறிந்த அரசுத் தரப்பு பல பகுதிகளில் கள்ள ஓட்டுக்களைப் பெருமளவில் போட்டு விட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
திஸநாயகேவின் குற்றச்சாட்டுக்களும் தேர்தல் மோசடியாகத்தான் நடந்தது என்று எண்ணவே தோன்றுகிறது. தனது கையை விட்டு நிலைமை போய் விட்டதை மறைமுகமாக அவர் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் இந்தத் தேர்தல் முடிவுகள் நிஜமானவையா என்ற சந்தேகமும் எழுவதைத் தடுக்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications