குறைந்த காற்றழுத்தம் எதிரொலி-பாம்பனில் கடல் கொந்தளிப்பு

வட கிழக்குப் பருவ மழை தமிழகத்தில் ஓய்ந்து விட்டது. தற்போது பின் பனிக்காலம் நடந்து வருகிறது. இதனால் இரவில் கடும் பனியும் பகலில் வெயிலுமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று திடீரென சென்னை நகரில் பலத்த மழை கொட்டி அனைவரையும் குழம்ப வைத்து விட்டது.
அடையாறு, சாந்தோம், திருவல்லிக்கேணி, அரும்பாக்கம், திரு.வி.க.நகர், பெரம்பூர், ஓட்டேரி, அயனாவரம், அண்ணாநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.
இந்த மழைக்கு என்ன காரணம் என்று வானிலை ஆய்வு மையத்திடம் கேட்டபோது,
தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் மெலிந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் லேசாக மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம் இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மிகவும் பலவீனமானதாக இருப்பதால், 24 மணி நேரத்திற்குள் இது கலைந்து போகக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு மழை இல்லாமலும் போகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் பாம்பன் கடல் பகுதியில் கொந்தளிப்பு காணப்படுகிறது.
ராமேசுவரம், தங்கச்சிமடம், அக்காமடம் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசவதால் ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்தன.
இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த அருளானந்தம், ராஜா, உள்பட 3 பேருக்கு சொந்தமான விசைப்படகுகளில் நங்கூரம் அறுந்து கவிழ்ந்தது. தரை தட்டி நின்ற அந்த படகுகளை மீனவர்கள் கயிறு கட்டி மேடான பகுதிக்கு இழுத்தனர்.
மண்படம், வடக்கு கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகம் காணப்படுகிறது. இதனால் மண்டபம் கடலோர காவல்படை தடுப்பு சுவரை தாண்டி விழுகிறது.
பாம்பன் பாலத்தை தொடும் அளவுக்கு அலைகள் எழும்புவதால் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன.
கடல் கொந்தளிப்பு காரணமாக நாட்டு படகு மீனவர்கள் குறைந்த அளவே கடலுக்கு செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications