செளதியில் தத்தளிக்கும் 22 இந்திய இன்ஜினியர்கள்!
ரியாத்: செளதி நிறுவனத்தின் மூலம் வேலைக்காக அழைத்து வரப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த 22 பொறியாளர்கள் வேலையும் இல்லாமல், சொந்த ஊருக்கு திருப்பியும் அனுப்பப்படாமல் பல மாதங்களாக தத்தளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து உட்பட பல வெளிநாடுகளில் பொறியியல் உயர் கல்வி முடித்துள்ள இவர்களின் விசா தொலைந்து போய்விட்டதால் வேலையில் சேர்க்க முடியாது என அந்த நிறுவனம் கூறுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லா உதின் (26) கூறுகையில்,
ரியாத்துக்கு கடந்த பிப்ரவரி 24ம் தேதி வந்தேன். வேலைக்காக என்னை அழைத்துவந்த நிறுவனம் இங்கு வந்த பிறகு மறுத்துவிட்டது. சம்பளமும் தரவில்லை. காரணம் கேட்டதற்கு என்னுடைய விசா தொலைந்துவிட்டது என கூறுகிறார்கள். ஆனால் தொலைந்து போன விசாவை தேட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு வருடமாகிவிட்டது. நானும் என்னைப் போன்ற 21 இன்ஜினியர்களும் சம்பளம் அல்லது இழப்பீடு என எதுவும் கிடைக்காமல் அல்லாடி வருகிறோம்.
சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் எனக் கேட்டாலும் அனுப்ப மறுக்கிறார்கள் என்றார்.
இந்திய தூதரகத்தில் இருந்து இதுதொடர்பான எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது இவர்கள் அனைவரும் செளதியில் உள்ள கேரள சங்கங்களின் கூட்டமைப்பில் புகார் செய்துள்ளனர்.
அவர்கள் மூலமாக இந்திய தூதரகத்திற்கு இவ்விவகாரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications