ஆஸ்திரேலியாவில் இந்தியர் ரஞ்சோத் சிங் கொலை - தம்பதி உள்பட 3 இந்தியர்கள் கைது

இனவெறி காரணமாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்பட்ட நிலையில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
25 வயதான ரஞ்சோத் சிங், ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணம், கிரிபித் நகரில் கடந்த டிசம்பர் 29ம் தேதி உயிருடன் எரித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
முதலில் இது இனவெறியால் நடந்த கொலையாக கருதப்பட்டது. விசாரணையில், ஒரு தம்பதி உள்பட 3 இந்தியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான தம்பதியும் கிரிபித் பகுதியில்தான் வசித்து வருகின்றனர். இவர்களுடன் ரஞ்சோத் சிங்குக்கு நட்பு இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ரஞ்சோத் சிங்கின் உடல் இன்று டெல்லி வந்து சேர்ந்தது. அவரது உடலில் பலத்த தீக்காயம் காணப்படுகிறது. முதலில் அவரை கழுத்தை நெரித்துள்ளனர். பின்னர் கத்தியால் பலமுறை உடல் முழுவதும் குத்தியுள்ளனர். அரைகுறையாக உயிருடன் இருந்த நிலையில் அவரைக் கொடூரமாக தீவைத்துக் கொன்றுள்ளனர் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து உதவி போலீஸ் ஆணையர் மார்க் முர்டோச் கூறுகையில், இது மிகவும் கோரமான கொலையாகும். மிகக் கொடூரமான முறையில் ரஞ்சோத் சிங் கொல்லப்பட்டுள்ளார். கொலையின் உச்சகட்ட அளவு இது என்றார்.












Click it and Unblock the Notifications