வரதட்சணை கேட்டு சித்ரவதை: சாப்ட்வேர் என்ஜினியர் கைது

ஆலந்தூர் தாடி ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமாதேவிக்கும் (27) திருச்சியை சேர்ந்த பிரபாகர் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் இவர்கள் திருச்சியில் வசித்து வந்தனர். பின்னர் சென்னைக்கு வந்துவிட்டனர். பிரபாகர் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் ரமாதேவி, கணவன் தன் வீட்டாருடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் ரமாதேவி அளித்துள்ள புகாரில், திருமணத்தின்போது எனது பெற்றோர் 70 பவுன் நகையும், 3 கிலோ வெள்ளிப் பொருட்களையும் வரதட்சணையாக கொடுத்தனர்.
திருமணம் முடிந்து திருச்சியில் இருந்தபோது எனது மாமியார் நகைகளை வாங்கிக் கொண்டார். தற்போது என் கணவரின் தங்கை கணவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது.
எனவே என்னிடம் கூடுதல் வரதட்சணை பணம் கேட்டு கணவர் மற்றும் அவரது வீட்டார் சித்ரவதை செய்தனர். என் கணவரின் தம்பி என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார். என்னை பட்டினி போட்டு சித்ரவதை செய்தனர்.
திருச்சியில் கணவர் வீட்டார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டி வருகிறார்கள். அதற்காக எனது வீட்டில் சென்று ரூ.3 லட்சம் பணம் வாங்கி வருமாறு கூறினார்கள்.
நான் மறுத்ததால் என்னை எனது தாய் வீட்டில் கொண்டு விட்டுவிட்டனர். ரூ.3 லட்சம் பணத்துடன் வந்தால் குடும்பம் நடத்தலாம். இல்லாவிட்டால் அங்கேயே இருந்துவிடு என்கிறார்கள்.
என்னை சித்ரவதை செய்யும் எனது கணவர் பிரபாகர், அவரது தந்தை ஏழுமலை, தாய் பானுமதி, தம்பி நந்தகுமார், தங்கை கவிதா, அவரது கணவர் லோகநாதன், உறவினர் கிருஷ்ணவேணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ரமாதேவியின் கணவர் பிரபாகரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications