தமிழக அரசின் தலைமைச் செயலக தற்காலிகப் பணியிடங்கள் ரத்தாகிறது
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியிடங்கள் ரத்தாகும் எனக் கூறப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் 34 அரசுத் துறைகள் செயல்பட்டு வருகின்றன. அரசின் முக்கிய உத்தரவுகள், அறிவிப்புகள் உள்ளிட்டவை இங்கிருந்து வெளியாகின்றன.
நிரந்தரப் பணியிடங்களுடன் குறிப்பிட்ட அளவு தாற்காலிகப் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படும். அடுத்த ஆண்டு கால நீட்டிப்புக்கான உத்தரவு ஒவ்வொடு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.
கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர், சார்பு செயலாளர் என பல்வேறு நிலைகளில் இந்த தாற்காலிகப் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களில் பணியாற்றுவார்கள். அவற்றில், 150-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய கால நீட்டிப்பு இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், நடப்பாண்டில் இந்தப் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கால நீட்டிப்பு வழங்கப்பட்டால் மட்டுமே தாற்காலிக பணியிடங்களுக்கு சம்பளம் அளிக்கப்படும். 150க்கும் மேற்பட்ட பணியிடங்களை நீட்டிக்காததால் அந்த இடங்களில் பணியாற்றுவோருக்கான ஜனவரி மாதச் சம்பளத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, ஜனவரி மாத சம்பளத்தை மட்டும் வழங்கக் கோரி சம்பளம் மற்றும் கணக்குகள் துறைக்கு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை கடிதம் எழுதியுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி மாதத்துக்கு மட்டும் சம்பளத்தை வழங்கக் கோரியுள்ளதால், பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படுமா என்பது சந்தேகம். அதற்குள் அந்தப் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டு விடலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த நிலையில், சோனி எனப்படும் சார்பற்ற பிரிவு அலுவலர் பணியிடங்களை இந்த ஆண்டு நீட்டிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடையே எழுந்துள்ளது.
தாற்காலிகப் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் சோனியை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
உதவிப் பிரிவு அலுவலர் நிலையில் இருந்து பிரிவு அலுவலர் பணியிடத்துக்கு பதவி உயர்வு அளிக்கப்படும்.
பதவி உயர்வு பட்டியலில் உள்ளதை விட, காலியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது சார்பற்ற பிரிவு அலுவலர் என்ற நிலை பின்பற்றப்படும். இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 100 பேர் பயன்பெற்று வந்தனர்.
கடந்த பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த ஆண்டில் இதுவரை அதை நீட்டிப்பதற்கான உத்தரவை அரசு வெளியிடவில்லை. சார்பற்ற பிரிவு அலுவலர் பணியிடங்களை உடனடியாக வழங்கவும் தலைமைச் செயலக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications