என் மீதான கட்டுப்பாட்டை ராஜபக்சே நிறுத்தாவிட்டால் ரகசியங்களை வெளியிடுவேன் - பொன்சேகா

நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் பொன்சேகா. அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் நிற்க நான் முடிவு செய்த நாளிலிருந்து தொடங்கிய அனைத்து அரசுத் தரப்பு முறைகேடுகளையும் நான் ஆதாரங்களுடன் தொகுத்து வைத்துள்ளேன். யார் யாரெல்லாம் முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்பதை சேகரித்து வைத்திருக்கிறேன். என்னை எந்தெந்த அதிகாரிகள் துன்புறுத்தினார்கள் என்பதையும் ஆதாரங்களுடன் வைத்துள்ளேன்.
எனக்கு ஏதாவது நேரிட்டால் எனக்கு எதிராக சதி செய்த, மிரட்டிய, துன்புறுத்தியவர்கள் குறித்த ஆதாரங்கள் உரிய நேரத்தில் வெளியாகி விடும். மேலும் தேர்தலின்போது நடந்த மிகப் பெரிய அளவிலான மோசடிகளும் அம்பலமாகும்.
தீர்த்துக் கட்ட தீர்மானித்து விட்டார்கள்
சமீபத்தில் எனது அலுவலகத்தில் நடந்த அதிரடி ரெய்டுகள், எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டது. எனக்கு நெருக்கமான அதிகாரிகள் கைது செய்யப்பட்டது, நீக்கப்பட்டது, துன்புறுத்தப்பட்டது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது என்னைத் தீர்த்துக் கட்ட அவர்கள் தீர்மானித்து விட்டார்கள் என்பதையே தெளிவாக்குகிறது.
எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த 90 ராணுவ வீரர்களை நீக்கி விட்டு, வெறும் பிஸ்டலை மட்டும் வைத்துள்ள நான்கு போலீஸாரை பாதுகாப்புக்கு கொடுத்துள்ளனர். ராணுவத்திலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற எனக்கு நெருக்கமான அதிகாரிகளைக் கைது செய்துள்ளனர். அவர்களில் 3 பேர் ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், 2 கர்னல்கள் அடக்கம்.
அவர்களில் ஒருவருக்கு பத்திரிக்கையாளர் லசந்தா விக்கிரமதுங்கே கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாக அரசு அபாண்டமாக கூறியுள்ளது. இது மாபெரும் பொய்யாகும்.
எனது அலுவலகத்தைச் சேர்ந்த 20 ஊழியர்களையும் சிறையில் அடைத்துள்ளனர். எனது அலுவலகத்தில் இருந்த 23 கம்ப்யூட்டர்களை சிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சோதனையை நடத்த முறையான உத்தரவோ, அனுமதியோ அவர்களிடம் இல்லை. காட்டவும் இல்லை.
நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து போய் விட்டது. போலீஸிடமோ, கோர்ட்டுக்கோ போக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எந்த நேரத்திலும் உங்களை கைது செய்ய முடியும். பத்திரிகைகளுக்கு சுதந்திரம் கிடையாது. அனைவருமே ஒருவித நெருக்குதலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். தங்களது கடமைகளைச் செய்யும் உரிமை கூட அனைவருக்கும் இந்த அரசின் கீழ் மறுக்கப்பட்டுள்ளது.
நாட்டை விட்டுப் போக மாட்டேன்
இப்போதைக்கு நான் நாட்டை விட்டு வெளியேறும் திட்டத்தில் இல்லை. இங்கேயே இருந்து மக்கள் தொண்டாற்ற விரும்புகிறேன். தேவைப்பட்டால், எனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில காலம் நான் இடம் மாறலாம், அது வேறு விஷயம். ஆனால் நான் நாட்டை விட்டுப் போக மாட்டேன்.
மேலும் நானோ, எனது குடும்பத்தினரோ நாட்டை விட்டு போக முடியாது. காரணம், எங்களது பெயர்களை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர். எனது பெயர், மனைவி பெயர், வெளிநாட்டில் படிக்கும் எனது இரு மகள்களின் பெயர்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர். விமான நிலைய அதிகாரிகள் எங்களை வெளியேற அனுமதிக்க மாட்டார்கள்.
எங்களது சொந்தப் பாதுகாப்புக்காகத்தான் சின்னமான் லேக்சைட் ஹோட்டலில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கியிருந்தோம். 20 அறைகளை நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்தோம். இந்த நிலையில்தான் எதிர்க்கட்சித் தலைவர் (ரணில்) அல்லது என்னைப் படுகொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது.
ஆனால் இப்போது கதையை மாற்றிக் கூறி வருகிறது அரசு. புத்தியில் என்ன தோன்றுகிறதோ, அதையெல்லாம் வாய் வலிக்காமல் கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சொல்லும் கதை எதிலும் பொருத்தமில்லாமல் இருப்பது அவர்களது அறிவுக்கு எட்டவில்லை என்றார் பொன்சேகா.
பொன்சேகாவின் இந்தப் பேட்டி குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லாவிடம் கேட்டபோது, ஒரு பதிவு பெற்ற வாக்காளராகக் கூட இல்லாத இவர் சொல்வதை யாரும் நம்புவார்கள் என நான் கருதவில்லை. ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்லாட்சி குறித்துப் பேசும் இவர் முதலில் ஓட்டுப் போடாமல் இருந்தது ஏன் என்று விளக்கட்டும் என்றார்.












Click it and Unblock the Notifications