அம்பேத்கருக்கு புகழ் சேர்ப்பது திமுகதான்-கருணாநிதி
சென்னை: இன்று யார் யாரோ அம்பேத்கர் பெயரை பயன்படுத்தி நாட்டில் அரசியல் நடத்துகிறார்கள். ஆனால் அம்பேத்கருக்கு குரல் கொடுக்கும் இயக்கமாகவும், புகழ் சேர்க்கும் இயக்கமாகவும் திமுக விளங்கி வருகிறது என்று கூறினார் முதல்வர் கருணாநிதி.
மறைந்த முன்னாள் அமைச்சர் சத்திய வாணிமுத்து பேத்தி ராஜம் ரம்யா-நவீன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. முதல்வர் கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து பேசுகையில்,
அரசியலில், திமுகவில் பெண்கள் ஈடுபடுவது அந்த கால கட்டத்தில் சரியா இல்லையா என்ற விவாதத்துக்கு இடையே சத்தியவாணி முத்து திமுகவில் தன்னை ஈடுபடுத்தி பெண்களுக்காக புரட்சிகர கருத்தை எடுத்துச் சொன்னார்.
நீதிக் கட்சி என்ற சமுதாய எழுச்சிக்கான இயக்கமாகவும் ஐஸ்டிஸ் பார்ட்டி என்ற அரசியல் இயக்கமாகவும் மாறி அடிப்படை திராவிட உணர்வை ஊட்டிய இயக்கம் திமுக
இயக்கத்துக்காக சிறை செல்லவும், தொண்டுள்ளம் கொண்டுள்ளோரை இயக்கத்தில் சேர்த்து ஒரு முன்னேற்றத்தை உருவாக்கியவர் சத்தியவாணி முத்து.
அவர் ஆற்றிய தொண்டுகளை, பணிகளை நாம் மறந்து விட முடியாது. அதை நினைத்துப் பார்த்தாலே வலிவும், பொலிவும் ஏற்படும்.
நான் முதல்வராக இருந்த போது அவரும் அமைச்சராக இடம் பெற்றிருந்தார் என்று இங்கே பேசியவர்கள் கூறினார்கள். எனது அமைச்சரவையில் மட்டுமல்ல அண்ணா காலத்தில், அவரது அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார்.
அண்ணா மறைவுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் ஒருவராக சத்தியவாணி முத்து விளங்கிய கால கட்டத்தில் அம்பேத்கர் பெயரில் ஒரு கல்லூரி பெரம்பூரில் தொடங்கப்பட்டது. அதுவும் தனது தொகுதியான பெரம்பூரில் தான் தொடங்க வேண்டும் என்று சத்தியவாணி முத்து வாதாடி பெற்றார்.
அந்த கால கட்டத்தில் கல்லூரி தொடங்க அரசுக்கு ஓரளவு பணம் கொடுக்க வேண்டும். அந்த பொறுப்பையும் அவர் ஏற்று ஏ.எல்.சீனிவாசனிடம் 5 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுத்தந்து அம்பேத்கர் கல்லூரி உருவாக வழிவகை செய்தார்.
இந்தியாவில் அம்பேத்கர் பெயரில் உருவான முதல் கல்லூரி தமிழ்நாட்டில் தான் அதுவும் பெரம்பூரில் தான் அமைந்தது. நான் முதல்-அமைச்சராக இருந்த போது சத்தியவாணி முத்துவின் வற்புறுத்தல் காரணமாகத்தான் இதுவும் வந்தது.
கல்லூரி மட்டுமல்ல அம்பேத்கார் பெயரில் பல்கலைக்கழகமும், சட்டப்பல்கலைக் கழகமும் சென்னையில் தான் வைக்கப்பட்டது. இந்த பல்கலைக் கழகத்தை எங்கே கட்டுவது என்ற நிலையில் எனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டை அம்பேத்கர் பல்கலைக்கழக அலுவலகம் வைக்க நான் விட்டுக் கொடுத்தேன் என்பது வரலாறு.
மராட்டியத்தில் அம்பேத்கர் பல்கலைக்கழகம் உருவாக்க 12 ஆண்டுகளுக்கு முன்பே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமுலுக்கு வராததால் தலித் மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள். பத்திரிகையில் இது செய்தியாக வந்ததை பார்த்து நானும், அங்கு பல்கலைக்கழகம் உருவாக அறிக்கை வெளியிட்டேன்.
தமிழ்நாட்டில் இருந்து எல்லோரும் திமுகவினர் அனைவரும் தந்தி கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். இதையடுத்து ஆயிரக்கணக்கான தந்திகள் அங்கு குவிந்தன.
அப்போது அங்கு கவர்னராக இருந்த அலெக்சாண்டர் எனக்கு கடிதம் எழுதினார். கோரிக்கையை நிறைவேற்ற அரசாணை பிறப்பிக்க இருப்பதாகவும் கடிதம் எழுதினார். அதன் பிறகே மராட்டியத்தில் அந்த கிளர்ச்சி ஓய்ந்தது. அம்பேத்கர் பெயரில் பல்கலைக்கழகமும் வந்தது.
இன்று யார் யாரோ அம்பேத்கர் பெயரை பயன்படுத்தி நாட்டில் அரசியல் நடத்துகிறார்கள். ஆனால், அம்பேத்கருக்கு குரல் கொடுக்கும் இயக்கமாகவும், புகழ் சேர்க்கும் இயக்க மாகவும் திமுக விளங்கி வருகிறது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications