பென்னாகரம் இடைத் தேர்தலை நியாயமான முறையில் நடத்த பாமக கோரிக்கை
தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும். இதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தர்மபுரியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்,
- அண்மையில் வைரவிழாவை கொண்டாடிய இந்திய தேர்தல் ஆணையம், நமது ஜனநாயகத்தை செல்லரிக்கச் செய்து வரும் பணபலம், அதிகாரபலம் ஆகியவற்றை ஒழிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பணபலத்தை முறியடித்து அதிகார துஷ்பிரயோகத்தை தடுத்து பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடைபெற தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- பென்னாகரம் தொகுதியில் பா.ம.க.வின் ஆதரவாளர்கள் பெருமளவில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பித்தும் அவர்களை வாக்காளர் பட்டியில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது.
இது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ள அனைவரையும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அறிவித்துள்ளபடி 2012-ம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவேற்றி முடிக்கும் வகையில் இந்த திட்டத்திற்கான 5 தொகுப்பு பணிகளையும் ஒரே நேரத்தில் தொடங்கி செயல்படுத்த வேண்டும்.
- ஏழை, எளியவர்களை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி வரும் மதுக்கடைகளை மூட வேண்டும்.
- தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நாமக்கல், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பொய்த்து விட்டதால் ஏரிகள், கிணறுகள் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அடுத்த மழைக்காலம் வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாக அளிக்கவேண்டும். கிணற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும்.
- பாம்பாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்து நடைமுறைக்கு வராத சூழ்நிலையில் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் புதிய அணைகள் கட்டுதல், பாசன வசதிகள் பெருக்குதல் ஆகியவற்றை கண்காணித்து உடனுக்குடன் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications