ரூ.10 கோடி மதிப்புள்ள ஜேபிஜே சொத்துக்கள் முடக்கம்

சென்னை அண்ணா நகரில் இயங்கி வந்தது ஜே.பி.ஜே சிட்டி டெவலப்பர்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனம். தவனை முறையில் வீட்டு மனைகளை விற்பனை செய்வதாக கூறி, இந்நிறுவனம் 10க்கும் மேற்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது.
இதை நம்பி தமிழகம் முழுவதும் உள்ள இந்நிறுவனத்தின் கிளைகளில் பொதுமக்கள் போட்டி போட்டு பணம் கட்டினர். ஆனால் சொன்னபடி மனைகளை கைமாற்றாமல் ஜே.பி.ஜே. நிறுவனம் மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறினர்.
பல கோடி ரூபாய் வரை ஜே.பி.ஜே நிறுவனம் பொதுமக்களிடம் மோசடி செய்யதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு நிறுவன அதிபர் ஜஸ்டின் தேவதாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு முறை போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி திலகவதி இவ்வழக்கு குறித்து சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
'ஜே.பி.ஜே சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக மொத்தம் 2 ஆயிரத்து 233 பேர் இதுவரை புகார் கொடுத்துள்ளனர்.
அதன் பேரில் சென்னை, காஞ்சீபுரம், திருச்சி, திருவள்ளூர், திருவாருர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்நிறுவன அலுவலகங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இதில் 219 இடங்களுக்கான நில ஆவணங்கள், 4 சொகுசு கார்கள், 1 மோட்டார் சைக்கிள், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.10 கோடி மதிப்புள்ள ஜே.பி.ஜே. நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.25 கோடியே 89 லட்சத்து 76 ஆயிரத்து 50 ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது.
இந்த வழக்கில் ஜஸ்டின் தேவதாஸ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி பெல்லா ஜஸ்டின், சாமுவேல்நடேசன் ஆகிய இருவரும் இன்னும் சிக்கவில்லை. இவர்களது பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
ஜஸ்டின் தேவதாஸ் தனது அலுவலக உள் அலங்கார வேலைக்கு மட்டும் ரூ.1 கோடி செலவு செய்துள்ளார். எங்களது முக்கிய குறிக்கோள் பணத்தை இழந்த முதலீட்டாளர்களுக்கு அதை மீட்டுக் கொடுப்பது தான்.
அதை விடுத்து இந்த மோசடியின் பின்னணியில் வி.ஐ.பி.க்கள் இருக்கிறார்களா? யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது. என்று விசாரித்து வழக்கை வளர்ப்பதற்கு விரும்பவில்லை' என்றார்.












Click it and Unblock the Notifications