ஆர்.எஸ்.எஸ்ஸின் மும்பைப் பேச்சு-பாஜக ஆதரவு- சிவசேனா கொதிப்பு
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிராவில் வட இந்தியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்று பாஜக கூறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா இடையே சண்டை மூண்டுள்ளதால் பாஜகவின் மண்டை காயத் தொடங்கியுள்ளது.
உத்தவ் தாக்கரேவின் காட்டம்...
இதுகுறித்து சாம்னாவில் கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே எழுதியுள்ள கட்டுரையில், மும்பை தொடர்பான விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ். தலையிடாமல் ஒதுங்கியிருக்க வேண்டும்.
மும்பை தொடர்பான எந்த விஷயத்திலும் அது கருத்து தெரிவிக்கக் கூடாது. இந்த நகரம், மகாராஷ்டிராவுக்கும், மராத்தி மக்களுக்கும் மட்டுமே சொந்தமானது.
இந்தியைக் காக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்பினால், முதலில் தென்னிந்தியாவில் போய் அதைச் செய்யட்டும் என்று கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், மகாராஷ்டிராவில் வசிக்கும் வட இந்தியர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும், தங்களது அமைப்பினர், மகாராஷ்டிராவில் வசிக்கும் வட இந்தியர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும், இந்தியா அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானது. இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் உரிமை இந்தியர்களுக்கு உண்டு. மொழி, ஜாதி, துணை ஜாதி, கோஷ்டி, பழங்குடியினர் என்று பேதங்கள் இருக்கலாம். ஆனால் அனைவரும் இந்தியாவின் புதல்வர்கள் என்று கூறியிருந்தார் பகவத்.
பகவத்தின் அழைப்பை ஏற்று, மகாராஷ்டிராவில் வசிக்கும் வட இந்தியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ் ஜபல்பூரில் கூறியிருந்தார். இதுதான் தற்போது சிவசேனாவை கோபப்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், சிவசேனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் மோதலால் கூட்டாளிக் கட்சியான பாஜகவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.
கத்காரி, சாந்தகுமார் ஆதரவு..
அதேசமயம் கட்சியின் துணைத் தலைவர் சாந்தகுமார், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதுகுறித்து சாந்தகுமார் கூறுகையில், வட இந்தியர்கள் மகாராஷ்டிராவில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமையை அரசியல் கட்சிகள் மதிக்க வேண்டும். இந்தியர்கள் அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள் அரசியல் மட்டுமே செய்ய வேண்டுமே தவிர நாட்டைப் பிரிக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது என்றார்.
இதேபோல கட்சித் தலைவர் நிதின் கத்காரியும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், பிராந்திய, தேசிய அடையாளங்களுக்கிடையே மோதல் வரக் கூடாது. இதுபோன்ற பாகுபாட்டின் மீது பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை.
பிராந்திய அளவில் உள்ள பாரம்பரியம், வரலாறு, மொழி அடையாளத்தை நாங்ள் மதிக்கிறோம். அதேசமயம், தேசிய மற்றும் பிராந்திய அடையாளங்களுக்கிடையே எந்தவித மோதலும் வரக் கூடாது. மொழி, மத, பிராந்திய அடையாளங்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதையோ, பாரபட்சம் காட்டப்படுவதையோ நாங்கள் விரும்பவில்லை என்றார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சிவசேனாவைக் கண்டிக்கும் வகையில் பேசியதற்கு பாஜக ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்திருப்பதால் பாஜக- சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்படும் எனத் தெரிகிறது.
பிறவி மராத்தியர்களுக்கே வேலை- ராஜ் தாக்கரே:
இந் நிலையில் மகாராஷ்டிராவில் பிறந்தவர்களுக்கு மட்டுமே வேலை தர வேண்டும். வெளியில் பிறந்தவர்களுக்கு வேலை தரக் கூடாது என்று மகாராஷ்டிர அரசை மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார்.
மராத்தி, மகாராஷ்டிரா, சிவசேனா எதிர்ப்பு ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை மட்டுமே தனது கொள்கையாக வைத்து செயல்பட்டு வருகிறார் ராஜ் தாக்கரே.
இந்த வரிசையில் இன்று ஒரு புதிய அம்சத்தை தனது பேச்சில் வெளிப்படுத்தியுள்ளார் ராஜ் தாக்கரே.
மும்பை, மாதுங்கா பகுதியில் உள்ள சண்முகானந்தா ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஒருவருக்கு மராத்தியில் பேசத் தெரியும், எழுதத் தெரியும், படிக்கத் தெரியும் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு உள்ளூர் வேலைகளைக் கொடுத்து விட முடியாது. பிறவியிலேயே அவர் மராத்தியராக இருக்க வேண்டும்.
வெறுமனே மராத்தி பேசத் தெரியும், எழுதத் தெரியும், படிக்கத் தெரியும் என்று கூறிக் கொண்டு இங்கு வேலைகளை பறிக்க முயலக் கூடாது.
கடந்த வாரம் கூட நமது கட்சியினர் சிலர் வட இந்திய டாக்சி டிரைவர்களுக்கு மராத்தி கற்றுக் கொள்ளும் புத்தகத்தை வழங்கியுள்ளனர். இது தவறு. உங்களை யார் அவர்களுக்கு மராத்தி கற்றுக் கொடுக்கச் சொன்னது?.
பிறவி மராத்தியர்களுக்குத்தான் இங்கு இடம், வேலை எல்லாம். கற்றுக் கொண்டு மராத்தியர்கள் என்று நாடகமாட அனுமதிக்க மாட்டோம்.
பிப்ரவரி 13ம் தேதி முதல் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன் என்றார் ராஜ்.












Click it and Unblock the Notifications