ஒய்எஸ்ஆர் சாவில் மர்மம்: கறுப்புப் பெட்டி பதிவை வெளியிட ஜெகன் மனு
ஹைதராபாத்: ஒய்எஸ்ஆர் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிப்பதால், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி பதிவுகளை விரைவில் வெளியிடவேண்டும் என ஒய்எஸ்ஆரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொருளாதாரத் துறை நிபுணர் லாரன்ஸ் என்பவர் ரஷ்ய பத்திரிகை ஒன்றில் பேட்டி அளித்தார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஆலோசகரான இவர், தனது பேட்டியின் போது, ரெட்டி மரணத்தில் அம்பானி சகோதர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து ஆந்திராவில் உள்ள ரிலையன்ஸ் கடைகளை காங்கிரசார் அடித்து நொறுக்கினர். இதில் ரெட்டியின் மகன் ஜெகன்மோகனின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், முதலில் புகார் கூறி பேட்டி அளித்த லாரன்ஸ் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காங்கிரசார் மத்தியில் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி மத்திய விமானத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேலை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.
அதில், 'எனது தந்தை ராஜசேகர ரெட்டி சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. ஹெலிகாப்டர் விபத்து பற்றிய விசாரணை அறிக்கையில் இதுவரை கறுப்புபெட்டி பேச்சு விவரத்தை வெளியிடவில்லை.
ஹெலிகாப்டர் கறுப்பு பெட்டியில் கடைசி 32 நிமிட பேச்சு பதிவாகி இருக்கும். அதில் எனது தந்தை என்ன பேசி இருக்கிறார் என்பதை அறிய ஆசைப்படுகிறேன். எனவே விரைவில் கறுப்புபெட்டி பேச்சு விவரத்தை வெளியிட வேண்டும்.
அப்போதுதான் அது விபத்தா, அல்லது வேறு ஏதேனும் சதியால் நிகழ்ந்த உயிரிழப்பா என்பது தெரியவரும். சரியாக பராமரிக்கப்படாமல் இருந்த ஹெலிகாப்டரை எதற்காக பயன்படுத்தினார்கள் என்பதையும் விளக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
ஒய்எஸ்ஆர் சிலை- ரோசய்யா திறப்பு:
இந் நிலையில் திருப்பதி உதவி கலெக்டர் அலுவலகம் அருகே, ஒய்.எஸ். ஜசேகர ரெட்டியின் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த சிலையை முதல்வர் ரோசையா திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேச தொடங்கிய போது, ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். 'கட்சிக்கு விரோதமாக செயல்படும் திருப்பதி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவை கட்சியை விட்டு நீக்க வேண்டும்' என அவர்கள் வலியுறுத்தினர்.
இதனால் ரோசையா நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு வெளியேறினார். பின்னர் அவர் திருச்சானூர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஹைதராபாத் புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications