ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த மு.க.ஸ்டாலின்- சமபந்தியில் பங்கேற்றார்
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டத்தில் சமத்துவபுரம் திறப்பு விழாவுக்கு வருகை தந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், திடீரென திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்ததால் பக்தர்கள் வியப்படைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டையில் கட்டப்பட்டுள்ள சமத்துவப்புரம் திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்ற மு.க..ஸ்டாலின், திருச்சி விமான நிலையத்தில் இருந்து திடீரென ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார்.
அங்கு ஸ்டாலினை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் வரவேற்றார். பின்னர் நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
மு.க.ஸ்டாலினை கோவிலில் எதிர்பார்க்காத பக்தர்கள் வியப்படைந்தனர். அதை ஸ்டாலினும் உணர்ந்திருந்தார்.
தனது வருகை குறித்து அங்கு கூடிய செய்தியாளர்களிடம் அவர் விளக்குகையில்,
வருடம் தோறும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள கோவிலில் நடக்கும் சமபந்தி விருந்தில் கலந்து கொள்வது வழக்கம். இந்த வருடம் இன்று கந்தவர்க் கோட்டை சமத்துவப்புரம் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்தபோது, ஸ்ரீரங்கம் கோவிலில் சமபந்தி விருந்து நடப்பது தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலையைத்தில் இருந்து நேராக ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் சமபந்தி விருந்தில் கலந்து கொண்டேன்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் சமபந்தி விருந்தில் கலந்து கொள்வது பெருமையாக இருக்கிறது. புகழ்பெற்ற சரித்திரம் வாய்ந்த கோவிலுக்கு வந்தது பெருமையாக இருக்கிறது என்றார்.
பின்னர் சமபந்தியில் அமர்ந்து அனைவருடனும் சாம்பார் சாதம் சாப்பிட்டார் ஸ்டாலின்.
ஸ்ரீரங்கம் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம் வரை சென்ற மு.க.ஸ்டாலினுடன், சுற்றுலாவுக்காக வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேருவும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications