மாஜி தீவிரவாதி மீர் மாபெரும் சேவையாற்றியதற்காகவே பத்மஸ்ரீ விருது - உள்துறை அமைச்சகம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் தீவிரவாதி குலாம் முகம்மது மீர் நாட்டின் நலனுக்காக ஆற்றிய மாபெரும் சேவையை கருத்தில் கொண்டே அவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுப் பட்டியலில் முன்னாள் தீவிரவாதியான குலாம் முகம்மது மீரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
ஆனால் இந்த முடிவு சரியானதுதான் என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கியுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்னாள் தீவிரவாதியான குலாம் முகம்மது மீர் நாட்டின் நலனுக்காக மாபெரும் சேவை புரிந்துள்ளார். அதைப் பாராட்டும் வகையில்தான் இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
குலாம் முகம்மது மீரின் சேவை நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டுதான் அமைந்துள்ளன. அவரது செயல்பாடுகளை முழுமையாக பரிசீலித்த பின்னர் தான் விருது பெறும் பட்டியலில் அவரது பெயரும் இடம் பெற்றது.
மேலும் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா, மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட பலரும் அவருக்கு நன்சான்றிதழ் அளித்துள்ளனர்.
அவர் செய்த செயல்கள் நாட்டின் நலனுக்கு பேருதவியாக இருந்ததால்தான் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருது அளிக்கும் முறையில் எந்தவிதக் குழப்பமும், முறைகேடும் இல்லை என்றார் பிள்ளை.
முன்பு தீவிரவாதியாக இருந்த மீர், பின்னர் அதைக் கைவிட்டு விட்டு பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார். அதன் பின்னர் அவரே ஒரு படையை அமைத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான செயல்பாடுகளில் இறங்கினார். பல தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினரிடம் இவரது படையினர் பிடித்துக் கொடுத்துள்ளனர்.
இருப்பினும் இவர் மீது இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications