பேராசிரியைக்கு ஆபாச எஸ்எம்எஸ்: பிஎச்டி மாணவர் கைது
புதுச்சேரி: பல்கலைக் கழக பேராசிரியைக்கு ஆபாச எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த ஆய்வு மாணவர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி பல்கலைக்கழக ஆங்கில துறையில் பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிக்கிலா (35). இவரிடம் ஆய்வு மாணவராக பிஎச்.டி பயின்றுவந்தவர் மகாராஷ்டிராவை சேர்ந்த யாஸ்பால் (25).
நிக்கிலாவிற்கு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்ததால் அங்கு சேன்றுவிட்டார். எனவே அவரிடம் இருந்த ஆய்வு மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை பல்கலைக்கழகம் செய்தது.
இதன்படி, யாஸ்பாலை வேறு பேராசிரியரிடம் ஆய்வை தொடர பல்கலைக்கழகம் ஆலோசனை வழங்கியது. ஆனால் இதனை யாஸ்பால் ஏற்கவில்லை.
இந்நிலையில், பேராசிரியை நிக்கிலாவை பழிவாங்க திட்டமிட்டு, பேராசிரியை மொபைல் எண்ணுக்கு கடந்த நவம்பர் 25ம் தேதி முதல் அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பி யாஸ்பால் தொந்தரவு செய்துள்ளார்.
மேலும், இமெயில் மூலமாகவும் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேராசிரியை நிக்கிலா புதுவை பல்கலைக்கழக அதிகாரிகளிடமும், காலாப்பட்டு போலீசாரிடமும் புகார் செய்தார்.
புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று வகுப்பு முடிந்து திரும்பிய மாணவர் யாஸ்பாலை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications