திருச்சியில் தாறுமாறாக ஓடிய மணல் லாரி- 2 பேர் சாவு
திருச்சி: சாலையில் தாறுமாறாக ஓடிய மணல் லாரி மோதியதில், கல்லூரி மாணவி உட்பட இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருச்சி காவிரி ஆற்றில் மணல் அள்ளிய லாரி நேற்று காலை ராம்ஜிநகர் நோக்கி வேகமாக சென்றது. திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே வந்தபோது திடீரென லாரி டயர் பஞ்சர் ஆகி கட்டுப்பாட்டை இழந்தது.
வேகமாக வந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் தாறுமாறாக சாலையில் ஓடியது. ரோட்டில் சென்றவர்களை எல்லாம் மோதி தள்ளியது. லாரியை நிறுத்த முடியாமல் டிரைவர் திணறினார்.
முன்னால் சென்றுகொண்டிருந்த கார், சைக்கிள் என பல வாகனங்களின் மீதும் லாரி மோதிக்கொண்டு சென்றது. முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய போது, அதில் அமர்ந்திருந்த எஸ்தர் ஆக்னோ (21) ரோட்டில் தூக்கிவீசப்பட்டார்.
லாரி டயர் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவர் திருச்சி தீரன் நகரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவி.
மாணவி எஸ்தரின் உடம்பை லாரி டயர் இழுத்துக்கொண்டே சென்று முன்னால் சென்ற மற்றொரு கார் மீதும், பள்ளி வேனின் பின்பக்கத்திலும் மோதியது. பின்னர் பல வாகனங்களை சேதப்படுத்திவிட்டு ஒரு பெட்ரோல் பங்க் முன்பு போய் நின்றது.
இதனால் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் சாலையில் இருபுறத்திலும் அலறி அடித்து ஓடினர். சில வினாடிகளில் பெரும் கபளீகரத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள், 3 கார்கள், ஒரு தனியார் பள்ளி வேன், ஒரு சைக்கிள் என மொத்தம் 7 வாகனங்கள் பயங்கர சேதமடைந்தன.
இந்த விபத்தில் கல்லூரி மாணவி எஸ்தர்ஆக்னோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார். அவரது தந்தை அருண் ரவி ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
சைக்கிள் மீது லாரி மோதியதில் படுகாயம் அடைந்த பெயிண்டர் ராஜன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
மேலும் பள்ளி வேனில் சென்ற மாணவர்கள் 5 பேர் காயமடைந்துள்ளனர். உறையூர் பகுதியை சேர்ந்த அங்குசாமி (40) என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மணல் லாரியின் டிரைவர் சுப்பிரமணி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications