லண்டன் நிறுவனத்தின் இனவெறி-நோபல் வென்ற ராமகிருஷ்ணன் புகார்

ஆனால் அந்த நிறுவனம் இதை மறுத்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஓ2 என்ற நிறுவனத்திடம் ஐபோன் ஒன்றை வாங்க விண்ணப்பித்திருந்தார் வெங்கி. ஆனால் அந்த போனுக்கான சேவையை அளிக்க 3 மாத கட்டணமான 325 டாலரை டெபாசிட்டாக கட்ட வேண்டும் என ஓ2 நிறுவனம் வெங்கியிடம் கூறியுள்ளது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் வெங்கி. காரணம், வழக்கமாக இதற்கு டெபாசிட் தொகையெல்லாம் கோரப்படாது. வங்கிக் கணக்கில் சிக்கல் உள்ளவர்கள், கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தாதவர்களிடம் தான் டெபாசிட் கோரப்படும்.
ஆனால், அப்படி எந்தத் தவறும் செய்யாத தன்னிடம் மட்டும் டெபாசிட் கேட்ட செயல் இனவெறியாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக கோபத்துடன் கூறியுள்ளார் வெங்கி.
இதுகுறித்து வெங்கி கூறுகையில், இது மிகவும் வினோதமாக இருக்கிறது. இதை இனவெறி பிரச்சினையாக நான் கருதாவிட்டாலும் கூட இனவெறியுடன் கூடிய செயலாகவே நான் பார்க்கிறேன்.
ஒரு செயலுக்கு உரிய காரணம் இல்லாவிட்டால் நிச்சயம் அது இனவெறியாகவே இருக்க முடியும். அவர்களது அணுகுமுறை தவறு என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ளவேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படி ஒரு நிலைமை யாருக்கும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மிகவும் அபத்தமாக இருக்கிறது இது என்று கோபத்துடன் கூறினார்.
தற்போது லண்டனில் தங்கி ஆய்வுப் பணிகளை நடத்தி வருகிறார் வெங்கி என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் வெங்கியின் புகார்களை ஓ2 நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வெங்கட்ராமன ராமகிருஷ்ணன் தனது பெயரை விண்ணப்பத்தில் வெங்கி என்று எழுதியிருந்ததால்தான் குழப்பம் ஏற்பட்டு விட்டது.
மேலும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஒரு அமெரிக்க குடிமகன். அவரது பெயர் இங்கிலாந்து வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. மேலும் இங்கிலாந்தில் இதற்கு முன்பு அவர் ஒருமுறை கூட செல்போனை வாங்கியதில்லை. எனவே அவர் குறித்த தகவல்கள் யாரிடமும் இல்லை.
எனவேதான் அவரது நம்பகத்தன்மை குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. இதனால்தான் டெபாசிட் கோரப்பட்டது. மேலும் அவரது பெயரும் மிகச் சுருக்கமாக, வெறுமனே வெங்கி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததால் இதைக் கேட்க வேண்டியதாயிற்று என்று விளக்கியுள்ளார்.
இதற்கிடையே, லண்டனில் வசித்து வரும் இந்தியரான லார்ட் மேகநாத் தேசாய், வெங்கியின் புகாரை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், வெங்கி கூறும் புகார் நிச்சயம் இனவெறி என்று எடுத்துக் கொள்ளக் கூடியது இல்லை.
இது யாருக்கு வேண்டுமானாலும் நடைபெறலாம். இதை இனவெறிச் செயலாக நிச்சயம் பார்க்க முடியாது.
செல்போன்கள் என்பதை மிகவும் முக்கியமானவை, பாதுகாப்பு தொடர்பானவை. இதை கவனமாக கையாள வேண்டியது அவசியமாகிறது. அனைவரும் இதை சந்தித்துத்தான் ஆக வேண்டும்.
இதை வெங்கி பிரச்சினையாக்கியிருப்பது வருத்தம் தருகிறது. எனக்கு இதுபோல நடந்திருந்தால் நிச்சயம் நான் பிரச்சினையாக்கியிருக்க மாட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications