கோவையில் சொகுசு பஸ்கள் இயக்குவது யாருக்காக? விஜயகாந்த் கேள்வி

மேலும் உலகத் தமிழ் மாநாட்டிற்கு வரும் வெளிநாட்டு மக்களின் கண்களை குளிர்விக்கவே இந்த ஏற்பாடு என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாநகரில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இதுவரை பயன்படுத்தி வந்த பேருந்துகள் எந்த விதமான முன் அறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டன.
இவற்றுக்கு பதிலாக 200 புதிய மிதவை பேருந்துகளை துணை முதல்வர் ஸ்டாலின் வந்து இயக்கி வைத்துள்ளார். இவற்றில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரூ.2 ஆக இருந்த சாதாரண பஸ் கட்டணம் தற்போது ரூ.5 ஆகவும், 3 ரூபாய் கட்டணம் ரூ.7 ஆகவும் உயர்த்தப்பட்டது பொதுமக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் வேலைக்குச் செல்லும் பொதுமக்களும், காய்கறி விற்க செல்கின்ற தாய்மார்களும், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இந்த கூடுதல் செலவை எப்படி சமாளிக்க முடியும்?.
பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் விடப்பட்டது என்று முதலில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பிறகு இரண்டு மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை நினைத்தால் அதிர்ச்சி தான் மிஞ்சியது.
ஏற்கனவே அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வால் அவதிப்படுகின்றன மக்களுக்கு, நிவாரணம் அளிக்காமல் இருக்கின்ற செலவை கூட்டுகிறார்கள்.
திமுக அரசு நடத்தம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி அயல் நாட்டிலிருந்து வருகிறவர்களின் கண்களை குளிரச் செய்யவே இந்த புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளன.
ஆனால், அதே நேரத்தில் பொதுமக்கள் வயிறு எரியும் வகையில் கட்டணத்தை உயர்த்தலாமா?. மீண்டும் பழைய கட்டணத்தையே வசூலிக்க வற்புறுத்தி வருகிற 7ம் தேதி தேமுதிக கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications