சென்னை: பஸ் தினம்-சென்னை போலீஸ் தடை
சென்னை: பஸ் தினம் என்ற பெயரில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பெரும் இடையூறு செய்வதால் பஸ் தினம் கொண்டாட சென்னை போலீஸ் தடை விதித்துள்ளது
நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று பஸ் தினம் கொண்டாடினர். பஸ் சூளைமேடு அருகே வந்த போது கார்த்திகேயன் என்ற மாணவர் பஸ் கூரையில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது கை நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலையில் இறங்கி ரகளையில் ஈடுபட்டனர். எதிரே வந்த மற்ற பஸ்களின் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் 5 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதம் அடைந்தன. சூளைமேடு பகுதியில் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பயணிகள் காயத்துடன் அலறி அடித்து ஓடினர்.
போலீசார் இருந்தும் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தினறினர். சூளைமேடு சுரங்கப்பாதைக்கு கீழே சென்ற மின்சார ரயில்கள் மீதும் கல்வீசினர். இதனால் பயணிகள் அலறினர்.
உடனடியாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கட்டுக்கடங்காமல் கலவரம் செய்த மாணவர்களை அடக்க அதிரடி படை போலீசார் களமிறக்கப்பட்டனர். போலீஸ் படையை கண்டு ரகளை செய்த மாணவர் கும்பல் தப்பி ஓடியது.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், வழக்கு பதிவு செய்து 9 மாணவர்களை கைது செய்தார். தொடர்ந்து இதில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றார்.
இதற்கிடையே மாணவர்களின் ரகளையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் பயணிகளும், போலீஸ் கமிஷனரின் புகார் பிரிவு செல்போனில் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் ரவி, ஷகில் அக்தர், இணை கமிஷனர்கள் ரவிக்குமார், சேசஷாயி, சக்திவேலு, ஆகியோர் கலந்து ஆலோசித்தனர்.
பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் தொல்லை தரும் விதமாக நடத்தப்படும் பஸ் தின கொண்டாட்டத்திற்கு இன்று முதல் தடை விதிப்பது, பஸ் கொண்டாட்டங்களுக்கு போக்குவரத்து துறை பஸ்கள் வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது, கூரை மீது ஏறியோ, படிக்கட்டில் தொங்கிக் கொண்டோ செல்லும் மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications