சொத்து விவரம் வெளியிடுக - சொந்தத் தொழிலிலிருந்து விலகுக: அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு

சொத்து விவரத்தில் அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் குறித்த விவரங்கள், நகைகள் இருப்பு, பண விவரங்கள் உள்ளிட்ட சகல விவரங்களும் இடம் பெற வேண்டும் என பிரதமர் அலுவலகத்திலிருந்து அனைத்து அமைச்சர்களுக்கும் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
கடந்த டிசம்பர் மாதமும் இதேபோல ஒரு கடிதத்தை பிரதமர் அனுப்பியிருந்தார். தற்போது மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியிருப்பதன் மூலம் அமைச்சர்கள் மீதான தனது பிடியை அவர் இறுக்க ஆரம்பித்திருப்பதாக கருதப்படுகிறது.
இதுதவிர அமைச்சர்கள் அப்பதவிக்கு வருவதற்கு முன்பு நடத்திக் கொண்டிருந்த அல்லது பங்கேற்றிருந்த அல்லது பொறுப்பில் வைத்திருந்த தொழில்களிலிருந்து விடுபட வேண்டும். தற்போதும் அந்தத் தொழிலுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்றும் பிரதமர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அரசில் சேர்ந்த பிறகு எந்தவிதமான சொந்தத் தொழிலையும் அமைச்சர்கள் தொடங்கக் கூடாது. அப்படியே தொடங்கியிருந்தாலும் அதிலிருந்து விலகி விட வேண்டும். அதேபோல, அமைச்சர்களின் குடும்பத்தினர், எந்த ஒரு அரசுத் துறை நிறுவனங்களுடனும் எந்தவிதமான தொடர்பும் கொண்டிருக்கக் கூடாது.
ஒரு அமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சேர விருப்பம் கொண்டால், அதற்கு முன்பு பிரதமர் அலுவலகத்திடமிருந்து அனுமதியைப் பெற வேண்டும்.
அரசியல் தலைவர்களின் பொது வாழ்க்கையில் கண்ணியமும், ஒழுக்கமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், ஊழலை தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த உத்தரவுக்கு எந்தவிதமான சட்டப்பூர்வமான அந்தஸ்தும் இல்லாவிட்டாலும் கூட, இதை அனைத்து அமைச்சர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் கடிதம் கூறுகிறது.
மத்திய அமைச்சர்களாக இருந்தால் பிரதமரிடத்திலும், முதல்வர்களாக இருந்தால் பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், மாநில அமைச்சர்களாக இருந்தால், முதல்வர்களிடமும் சொத்துக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்கலாம் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications