ஸ்டேட் வங்கியில் பல லட்சம் முறைகேடு- அதிகாரி கைது
தேனி: கம்பம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் மோசடி செய்த வங்கி அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர்.
கம்பத்தில் விவசாய அபிவிருத்தி கிளையாக பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. வீட்டு வசதி கடன் திட்டத்தில் இந்த கிளையின் திடீர் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, வங்கி மூலம் வழங்கப்பட்ட கடன் உதவிகளில் முறைகேடு நடந்திருப்பதும், வங்கியின் சட்டதிட்டங்களுக்கு மாறாக கிளை மேலாளர் ராஜா கடன் வழங்கி உள்ளார் என்று ஆய்வில் தெரியவந்தது.
மதுரை கே.புதூர் ஸ்ரீஹரன் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சின்னத்துரை (37) மற்றும் அவரது கூட்டாளிகள் திருச்சி போனம்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ், போடி ஒழுகால் பாதையை சேர்ந்த முருகன், கிளை மேலாளர் ராஜா ஆகியோர் கூட்டாக சேர்ந்து மோசடி செய்தது தெரிய வந்தது.
கம்பத்தில் ஒரு ஏக்கர் 18 சென்ட் நிலத்தை முருகன் வாங்கியதாகவும், இரண்டு ஏக்கர் 84 சென்ட் நிலத்தை ஆரோக்கியதாஸ் வாங்கியதாகவும் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர்.
இந்த நிலங்களை சின்னத்துரையுடன் சேர்ந்து 135 பேருக்கு பிளாட் போட்டு 2008 அக்டோபர் முதல் நவம்பர் 6 ம் தேதி வரை விற்றுள்ளனர்.
அவர்கள் பெயரில், வங்கியில் கணக்கு ஆரம்பித்து கடன் பெறப்பட்டுள்ளது. இதில் வங்கியின் சட்ட திட்டங்கள் முறையாக பின்பற்றப்படவில்லை. மேலும், 135 பேரின் பெயரில் நிலத்திற்கான கிரைய பத்திரம் பதிவு செய்யப்படவில்லை.
போலியான நபர்களின் பெயரில் ஒப்பந்தம் ஏற்படுத்தி ஐந்து கோடியே 92 லட்சத்து 83 ஆயிரம் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து கோடியே 40 லட்சத்து 80 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 52 லட்சத்து மூவாயிரம் அசலும், வட்டியாக 28 லட்சத்து 31 ஆயிரமும் வர வேண்டியுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி மதுரை மண்டல மேலாளர் பாண்டியராஜன் தென் மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் செய்தார்.
இதையடுத்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், வங்கியில் கையாடல், கூட்டு சேர்ந்து சதிதிட்டம் தீட்டுதல், இழப்பு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். மற்ற மூவரும் தலைமறைவாகி விட்டனர்.












Click it and Unblock the Notifications