4 பெண்களை மணம் செய்த கல்யாண மன்னன் கைது!
சென்னை: சென்னையில் 4 பெண்களை மணந்து மோசடி செய்த 'கல்யாண மன்னன்' கைது செய்யப்பட்டார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (32). தாய் மனோன்மணியுடன் வாழ்ந்து வந்தார். பிளஸ்2 வரை படித்திருக்கிறார்.
எழும்பூரில் உள்ள அச்சகம் ஒன்றில் வேலை செய்த இவர், தாம்பரத்தை சேர்ந்த மைமூன்ஆசியா என்ற பெண்ணை காதலித்தார். அவரை கைப்பிடிக்க முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அப்துல்ரகுமான் என்று மாற்றிக்கொண்டார்.
கடந்த 97ம் ஆண்டு மைமூன்ஆசியாவை, சாந்தகுமார் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில் மனைவியின் தோழி சம்சாத்பேகம் என்பவரோடு சாந்தகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த மைமூன்ஆசியா பலமுறை கண்டித்தும் பலனில்லை.
இதனால், தனது 3 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கணவனை விட்டு பிரிந்தார் மைமூன்ஆசியா. ஆனால், சாந்தகுமார் சம்சாத்பேகத்தை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
சில நாட்களிலேயே சம்சாத்பேகத்தின் மற்றொரு தோழி அஞ்சலியுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார் சாந்தகுமார். இதையறிந்த சம்சாத்பேகம் சாந்தகுமாரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
அப்போதும் சளைக்காத சாந்தகுமார், அஞ்சலியை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு குடித்தனத்தை ஆரம்பித்தார்.
ஏற்கனவே இரண்டு பெண்களை ஏமாற்றிய உங்களை நம்ப முடியாது என்று அஞ்சலி அடிக்கடி சாந்தகுமாரோடு சண்டை போட ஆரம்பித்தார். இந்த மோதல் நாளுக்குநாள் அதிகமாகி ஒருகட்டத்தில் அஞ்சலி பிரிந்து போய்விட்டார்.
மூன்று பெண்களை மணந்தும் உருப்படியாக வாழ்க்கை அமையவில்லையே என்று சாந்தகுமார் சலிப்படைந்த நேரத்தில் அவருக்கு துபாயில் வேலை கிடைத்தது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள சொந்த வீட்டை விற்றுவிட்டு, 2006ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரை துபாயில் பெயிண்டர் வேலை பார்த்தார். தனது மனைவிகளை போலவே, துபாய் வேலையும் அவருக்கு நிலைக்கவில்லை.
விசாவில் பிரச்னை ஏற்பட்டு மீண்டும் சென்னை வந்தார். அயனாவரம், புதுநகர் குறுக்குத்தெருவில் வாடகை வீட்டில் சாந்தகுமார் குடியேறினார்.
மீண்டும் சாந்தகுமாருக்கு காதல் மோகம் துளிர்விட்டது. வீட்டு உரிமையாளர் முரளியின் மகள் சரண்யா (21)வை காதலித்தார். துபாயில் தான் பெரிய கான்டிராக்டர் என பொய் சொல்லி அங்கிருந்தவர்களை ஏமாற்றிவந்தார்.
குறிப்பாக சரண்யாவின் தாய் செல்வியிடம் துபாய் மிடுக்கு காட்டிய சாந்தகுமார், பலவிதமான கதைகளை சொல்லி, 'உங்கள் மகளை நான் கண்கலங்காமல் பார்த்துக்கொள்கிறேன். துபாய்க்கு கூட்டிச் சென்று ராணி மாதிரி வாழவைக்கிறேன். எனக்கு கல்யாணம் செய்துவையுங்கள்' என கேட்டார்.
சரண்யாவின் தந்தை இதற்கு சம்மதிக்காத நிலையில் செல்வி இவர்களின் காதலுக்கு ஒப்புதல் தந்துவிட்டார். நல்ல சமயம் பார்த்து யாருக்கும் தெரியாமல் சரண்யாவுடன் பதிவு திருமணம் செய்துவிட்டார் சாந்தகுமார்.
இதையறிந்த தாய் செல்வி, செங்கல்பட்டில் வாடகை வீடு எடுத்து அங்கு சில நாட்கள் தங்கலாம் என முடிவெடுத்தார். கொஞ்ச நாள் கழித்து கணவன் முரளி காதலுக்கு ஒப்புக்கொள்வார் என்றும் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று முரளியிடம் கூறிவிட்டு சரண்யாவை உடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டார் செல்வி.
செங்கல்பட்டில் மூன்றுபேரும் ஒன்றாக தங்கியிருந்தார்கள். இதற்கிடையே, சந்தேகமடைந்த, செங்கல்பட்டு மருத்துவமனையில் தனது மனைவி மற்றும் மகளை தேடினார்.
அவர்கள் எங்கும் கிடைக்காததால், முரளி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் செங்கல்பட்டில் தங்கியிருந்த சாந்தகுமார், சரண்யா மற்றும் செல்வியை கண்டுபிடித்து முரளியிடம் கடந்தவாரம் ஒப்படைத்தனர்.
அப்போது சாந்தகுமாரின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும், தனது மகளை மயக்கி ஏமாற்றுவதாகவும் முரளி போலீசில் புகார் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியபோது சாந்தகுமாரின் லீலைகள் அத்தனையும் அம்பலமானது.
ஏற்கனவே மூன்று பெண்களை மணந்து ஏமாற்றியவனை நம்பி ஏமாந்தோமே என சரண்யாவும், தாய் செல்வியும் தலையில் அடித்து அழுதனர்.
இதையடுத்து சாந்தகுமார் மீது அயனாவரம் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். மைமூன்ஆசியா, அஞ்சலி, சம்சாத்பேகம் ஆகியோரை திருமணம் செய்த புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையிலும், சாந்தகுமாரின் வாக்குமூல அடிப்படையிலும் அவரை அயனாவரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
நேற்று மாலையில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டார்.
அடுத்த மனைவி...!
எனினும் வழக்கு விசாரணைக்காக சாந்தகுமார் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எவ்வித சலனமும் இன்றி அவர் சிறைக்கு சென்றார்.
முன்னதாக சாந்தகுமார் போலீசிடம் வாக்குமூலம் அளிக்கையில், 'நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. 4 பேரும் வலிய வந்து என்னை காதலித்தார்கள். திருமணமும் செய்துகொண்டார்கள்.
அவர்களே காதலித்தார்கள். பின்னர் அவர்களாகவே பிரிந்து சென்றுவிட்டார்கள். இதற்காக நான் கவலைப்படவில்லை. நான் யாரிடமும் பணம் மோசடி செய்யவில்லையே.
இது இறைவன் எனக்கு கொடுத்த வாழ்க்கையாகவே கருதுகிறேன். எனது ஜாதகப்படி 5 பெண்களை மணக்க வேண்டும் என்று உள்ளது. இதுவரை அமைந்த மனைவிகள் சரியில்லை. இனிமேல் நல்ல மனைவி அமைவார்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications