பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்குத் தடை கோரி வழக்கு
சென்னை: இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு குற்றப் பின்னணியை உடையவர்கள் பெருமளவில் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேது என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
1954-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கான நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்பதால் அதில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டது. இந்த விருதுகளை வழங்குவதற்கு பல்வேறு விதிகளை வகுத்து 15.12.95 அன்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விருதுகளை மத்திய அரசு கடந்த 25.1.2010 அன்று பத்திரிகை செய்தி குறிப்பு மூலம் வெளியிட்டது. அதில், 130 பேர் விருது பெறுகிறவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் குற்ற பின்னணியை கொண்டுள்ளனர். எனவே, இந்த விருது பட்டியலை ரத்து செய்யவேண்டும். விருதுக்கான தேர்வை வெளிப்படையாக சட்ட அடிப்படையில் மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும்.
இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை விருது வழங்கப்படும் நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications