லஞ்சம் - மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்
மதுரை: மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பெருமளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து இன்று அங்கு சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டில் குதித்தனர்.
இந்த அதிரடி சோதனையில் உதவி பாஸ்போர்ட் அதிகாரி உள்பட நான்கு பேர் சிக்கினர். இதேபோல சென்னையில் நடந்த இன்னொரு சோதனையில் 3 பேர் கைதானார்கள்.
மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போட்டிற்காக விண்ணப்பம் செய்பவர்களிடம் லஞ்சம் கேட்பதாகவும், லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுவதில்லை என்றும், பொதுமக்களிடமிருந்து அரசுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் சத்தியமூர்த்தி, அன்பழகன் ஆகியோர் தலைமையில் சிபிஐ அதிகாரிகள் நேற்று மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனைக்குப் பின்னர் உதவி பாஸ்போர்ட் அதிகாரி கீதா பாய் (58) என்பவரை தல்லாகுளத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின்னர், கீதாபாயை, கே.புதூர் ஆவின் நகர் சர்வேயர் காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்று,வீட்டில் சோதனை நடத்தினர்.
இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உதவி பாஸ்போர்ட் அதிகாரி கீதாபாய் மற்றும் அவருக்கு லஞ்சம் வாங்கிக் கொடுத்து உதவியதாக அதே அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் துரைராஜ் (51), அன்பழகன் (57) மற்றும் புரோக்கர் இப்ராஹிம் மீரான் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இன்று சென்னையில் ரெய்ட்...
இந்த நிலையில் இன்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திலும் சிபிஐ ரெய்ட் நடந்துத.
மதுரை ரெய்டில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு ரெய்ட் நடத்தப்பட்டது. இதில் அலுவலக கண்காணிப்பாளர்கள் இருவர், புரோக்கர் ஒருவர் ஆகியோர் சிக்கினர்.
சில மாதங்களுக்கு முன்பு இதே அலுவலகத்தில் நடந்த சிபிஐ ரெய்டில், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் சிக்கினார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் மதுரையில் நடந்த சோதனையில் உதவி பாஸ்போர்ட் அதிகாரியான கீதா பாய் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications