மும்பை தாக்குதலில் ஒரு இந்தியருக்கும் தொடர்பு-ப.சிதம்பரம்
டெல்லி: மும்பையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் இந்தியர் ஒருவருக்கும் தொடர்பிருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
அவனது பெயர் அபு ஜின்டால் என்று தெரிகிறது.
மும்பையில் கடந்த ஆண்டு நவம்பரில் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக நுழைந்து நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
கமாண்டோக்கள் நடத்திய பதில் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிடிபட்ட ஒரே தீவிரவாதியான கசாப் மட்டும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்த தாக்குதலை பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு தான் நடத்தியது என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் சேர்ந்து நெருக்கிதையடுச்து ஓராண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் இப்போது தான் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அதற்கான ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு திட்டமிட்ட அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சேர்ந்த பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட டேவிட் கோல்மன் ஹெட்லீ மற்றும் கனடாவில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ராணா ஆகியோரை அமெரிக்க உளவுப் பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் புதிய திருப்பமாக பயங்கரவாதிகளுக்கு இந்தியர் ஒருவர் உதவியிருக்கலாம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தகவல் வெளியிட்டுள்ளார்.
சிஎன்பிசி-டிவி-18 தொலைக்காட்சியில் மூத்த பத்திரிக்கையாளர் வீர் சங்வியின் 'ஆப் த ரெக்கார்ட்' நிகழ்ச்சியில் சிதம்பரம் அளித்துள்ள சிறப்புப் பேட்டி:
இந்தியாவைப் பற்றி நன்கு அறிந்தவர் அல்லது இந்திய மொழிகளை குறிப்பாக இந்தியாவில் வாழ்பவரைப் போல ஹிந்தி மொழி பேசக் கூடிய ஒரு நபர் தீவிரவாதிகளுக்கு உதவியிருக்கலாம்.
இந்த நபர் இந்தியராகவோ அல்லது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊருடுவி இங்கு மிகுந்த பரிச்சயம் பெற்றவராகவோ இருப்பதற்கு வாய்ப்புண்டு. அல்லது இந்தியாவிலிருந்து வெளியேறி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாமில் பயிற்சி பெற்றவராக இருக்கலாம் என்றார் சிதம்பரம்.
அந்த நபர் உளவுத்துறையினர் சந்தேகிக்கும் அபு ஜின்டாலா? என்று வீர் சங்கி கேட்டதற்கு பதிலளித்த சிதம்பரம்,
யூகங்களுக்கு பதில் தர முடியாது. குரல் ஒற்றுமை குறித்து ஆய்வு செய்த பிறகே இதுகுறித்து தீர்மானமாக பதில் கூற முடியும்.
தீவிரவாதிகளுடன் செல்போனில் பேசி வழிநடத்திய நபர் அபு ஜின்டால் என்ற சந்தேகம் எங்களுக்கு நீண்ட காலமாகவே உள்ளது. இருப்பினும் அவரது உண்மையான பெயர் வேறாக இருக்கலாம். குரல் பதிவை ஆய்வு செய்யலாம் என்றால் அதற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications