Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீண்ட இடைவெளிக்குப் பின் களம் இறங்கும் ஜெ. - விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முதல் முறையாக நேரடிப் போராட்டக் களத்தில் குதிக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அவரது தலைமையில் நாளை விழுப்புரத்தில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை..

இனிக்கும் கரும்பைத்தரும் விவசாயிகளுக்கு கட்டுபடியாகக்கூடிய விலையை தி.மு.க. அரசு தர மறுப்பதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் மட்டுமல்லாமல், கரும்பு சாகுபடியே தமிழ்நாட்டில் கேள்விக்குறியாகியுள்ளது.

இதன் விளைவாக, சாமான்ய மக்கள் விலை கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு சர்க்கரையின் விலை விஷம்போல் உயர்ந்து கொண்டே போகிறது.

2005-2006ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ஆதார விலையாக மத்திய அரசு அறிவித்த 795 ரூபாயுடன், மாநில அரசின் ஆதார விலையான 219 ரூபாயையும் சேர்த்து கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 1,014 வழங்க நான் உத்தரவிட்டேன்.

இது தவிர, வாகன வாடகையை அந்தந்த ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதன் முதலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் எனது ஆட்சிக் காலத்தில்தான்.

எனது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, வெளிச்சந்தையில் ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ. 12.50 முதல் ரூ. 14 வரை விற்கப்பட்டது. இன்னும் சொல்லப் போனால், எனது ஆட்சியில் ஒரு கட்டத்தில் நியாய விலைக்கடைகளில் விற்கப்படுவதை விட வெளிச்சந்தையில் சர்க்கரையின் விலை குறைவாக இருந்தது.

எனது ஆட்சிக்காலத்தில் கரும்பு விவசாயிகளுக்கும், கரும்புத் தொழிலுக்கும், பொது மக்களுக்கும் சாதகமாக இருந்த நிலைமையை, தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிவடைவதற்குள் பாதகமாக மாற்றிக்காட்டியதுதான் சாதனை.

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு கரும்பிற்கான ஆதார விலையை ரூ. 503.40 என்ற அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. ஆனால், தி.மு.க. அரசோ 80 ரூபாய் அளவிற்கு மாநில அரசின் ஆதார விலையை குறைத்து இருக்கிறது.

2005-2006 ஆம் ஆண்டில் 21.38 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி, 2008-2009 ஆம் ஆண்டு 16.16 லட்சம் மெட்ரிக் டன்னாக குறைந்திருப்பது கரும்பு விவசாயிகளின் மனநிலையை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும், தற்போதைய தி.மு.க. ஆட்சியில் சர்க்கரை விலை ஒரு கிலோ 44 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

எனது ஆட்சிக் காலத்தில், ஒரு குவிண்டால் சர்க்கரை 1,250 ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டபோது, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,014 வழங்கப்பட்டது. ஒரு குவிண்டால் சர்க்கரை விலை 4,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் தற்போதைய சூழ்நிலையில், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 1,437.40 என்று தி.மு.க. அரசு அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களின் விவசாய விரோத போக்கையே காட்டுகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,100 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கரும்புக்கு கூடுதல் ஆதார விலை தரப்படுகிறது. வட மாநிலங்களில் உள்ள தனியார் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,250 வரை அளிக்கின்றன. தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் கூட கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,800 வரை தருகின்றன.

அதே சமயத்தில், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க் கரை ஆலைகளில் ரூ.1,437.40 தான் தரப்படுகிறது. அதாவது, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளை விட, தனியார் சர்க்கரை ஆலைகள் கூடுதல் விலை கொடுக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கரும்புக்கான ஆதார விலையை உயர்த்த கருணாநிதி மறுப்பது கடும் கண் டனத்திற்கு உரியது.

கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்பட வேண்டும் என்பது குறித்து அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும், அ.தி. மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றியும், கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், தி.மு.க. அரசுக்கு பலமுறை எடுத்துரைக்கப்பட்டும், அண்மையில் ஜனவரி 11-ந்தேதி அன்று சட்டமன்ற பேரவையில், நானே இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசியும், செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தாத தி.மு.க. அரசைக் கண்டித்தும்; உடனடியாக கரும்புக்கான ஆதார விலையாக டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 2,500 வழங்க வலியுறுத்தியும்; வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும்; கரும்பு விவசாயிகளுக்கு நமது முழுமையான ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், அ.தி.மு.க. சார்பில் வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில், விழுப்புரத்தில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதி நிதிகளும், கழக உடன்பிறப் புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும். கரும்பு விவசாயிகள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், குறிப்பாக விவசாயப் பெருமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயலலிதாவே நேரடியாக அதிமுக போராட்டத்திற்குத் தலைமை தாங்கப் போவதால் விழுப்புரம் பகுதி அதிமுகவினர் விறுவிறுப்படைந்துள்ளனர். பெருமளவில் கூட்டத்தைக் காட்ட ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளனவாம்.

திமுகவிடம் ஆட்சியை இழந்த பின்னர் ஆக்டிவ் அரசியலிலிலிருந்து கிட்டத்தட்ட ஜெயலலிதா ஓய்வு பெற்ற நிலையில்தான் இருந்து வருகிறார். தினசரி ஒரு போராட்டத்தை அவர் அறிவித்து வந்தாலும் அதை கட்சியின் 2ம் நிலை, மூன்றாம் நிலை தலைவர்களே தலைமையேற்று நடத்தி வந்ததால் அது ஒரு சம்பிரதாய போராட்டமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் அவரே போராட்டத்திற்குத் தலைமை தாங்கப் புறப்பட்டுள்ளதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+