கோவையில் சாதாரண பஸ்கள்தான் இயக்கப்படுகின்றன - அரசு விளக்கம்
சென்னை எதிர்க்கட்சிகள் சொல்வது போல கோவை நகரில் அதிக கட்டணத்திலான சொகுசு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படவில்லை. அங்கு ஓடும் 422 சாதாரண கட்டண பேருந்துகளும் சாதாரண கட்டண விகிதத்திலேயே இயக்கப்படுகின்றன என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாநகரில் 31-1-2010 வரை 422 சாதாரண கட்டணப் பேருந்துகளும், 50 சொகுசு கட்டணப் பேருந்துகளும் இயங்கி வந்தன. அண்மையில் கூடுதலாக 150 புதிய சொகுசு கட்டண பேருந்துகள் கோவை மாநகரில் விடப்பட்டுள்ளன.
இந்த 150 புதிய சொகுசு கட்டணப் பேருந்துகளில், 50 சொகுசு கட்டண பேருந்துகள் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த 50 சொகுசு கட்டணப் பேருந்துகளுக்கு மாற்றாக இயக்கப்படும்.
மீதமுள்ள 100 சொகுசு கட்டணப் பேருந்துகள் கூடுதல் சேவையாக இயக்கப்படும். அதாவது ஏற்கனவே இயங்கி வந்த 422 சாதாரணக் கட்டணப் பேருந்துகள், தொடர்ந்து சாதாரண கட்டண விகிதத்திலேயே சாமானிய மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இயக்கப்படும்.
சொகுசு பேருந்துகளை விருப்பமுள்ளோர் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதலாக கட்டணம் செலுத்த விரும்பாதவர்கள், சாதாரண கட்டண பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரையில் இவர்கள் அனைவரும் தொடர்ந்து எந்த விதமான கூடுதல் கட்டணமுமின்றி சலுகை மற்றும் இலவச பேருந்து பாஸ்களைப் பயன்படுத்தி எல்லாவிதமான பேருந்துகளிலும் பயணம் செய்யலாம் என்பது தெளிவாக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications