நளினி விடுதலை தொடர்பாக பத்திரிகைகளுக்குப் பேட்டி- சாமிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை: நளினி விடுதலை தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி பத்திரிகைகளுக்குத் தெரிவித்து வரும் கருத்துக்கள் குறித்து உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இது போல செய்து வந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அது எச்சரித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள நளினி, கடந்த 19 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். முன் கூட்டியே விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு நிராகரித்தது.
இதை எதிர்க்கும் வழக்கில், சட்டப்படி ஆலோசனை குழுவைக் கூட்டி நளினி விடுதலை தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் நளினியின் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதே வழக்கில் நளினி மீண்டும் மன்னிப்பு கோர முடியாது. இதுதொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதே உத்தரவின் மற்றொரு பிரிவை எதிர்த்து நளினி தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி என்.பால்வசந்தகுமார் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்குகள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன், நளினி விடுதலை தொடர்பான ஆலோசனைக் குழுவின் அறிக்கை அரசுக்கு இன்னும் வரவில்லை. இந்தப் பிரச்னையில் மத்திய அரசை கலந்தாலோசிக்காமல் மாநில அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்காது என்று தெரிவித்தார்.
நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், இந்த வழக்கில் நேரில் ஆஜராக நளினி அனுமதி கோரியுள்ளதையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரினார்.
அதற்கு சாமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கில் தனது தரப்பில் நீதிமன்றத்தில் வாதாட மூத்த வழக்கறிஞரை சாமி நியமித்துள்ளார். ஆனால், உயர் நீதிமன்றத்துக்கு வெளியே பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வழக்குத் தொடர்பாக அவரே வாதாடுகிறார்.
உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குத் தொடர்பாக அவர் வெளியில் கருத்து தெரிவிக்கலாமா? இதுதொடர்ந்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதையடுத்து சாமி சார்பில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், எதிர்காலத்தில் இது நடைபெறாது என்று உறுதியளித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 10ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications