பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை-பிரதமர் எச்சரிக்கை

கடந்த டிசம்பரில் உணவு பணவீக்க அளவு வரலாறு காணாத வகையில் 20 சதவீதம் அதிகரித்தது. சர்க்கரை, பருப்பு, காய்கறிகளின் விலை கண்களி்ல் ரத்தத்தை வரவழைக்கும் வகையில் தாறுமாறாக உயர்ந்து காணப்படுகிறது.
இதைச் சமாளிக்க பல்வேறு முக்கியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் இறக்குமதி அளவையும் அதிகரித்து தாராளம் காட்டியுள்ளது. அப்படி இருந்தும் விலைவாசி குறையவே இல்லை.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாமல் அரசு அலட்சியமாக இருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. இந்தப் பின்னணியில் முதல்வர்கள் மாநாட்டை பிரதமர் கூட்டினார்.
விலைவாசி உயர்வோடு உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது.
இன்றைய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், பருவமழை பொய்த்தன் காரணமாகவும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றம் காரணமாகவும் தான் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
இப்போது மட்டுமல்ல, கடந்த 1998ம் ஆண்டு பாஜக ஆட்சியிலும் இதே போல விலைவாசி உயர்ந்தது.
ஆனால், இப்போது அரசு எடுத்துள்ள பல அவசர நடவடிக்கைகளால் நிலை மாறி வருகிறது. விரைவிலேயே விலைவாசி கட்டுக்குள் வரும்.
விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மாநில அரசுகளும் முழு அளவில் உதவ வேண்டும்.
பொது விநியோக திட்டத்தை மாநில அரசுகள் நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும். உணவு பொருள் பதுக்கல்காரர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படும். ஏற்றுமதியை குறைப்பதன் மூலம் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
நாட்டில் போதுமான அளவு உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன. இதனால் மாநில அரசுகள் பீதியடைய வேண்டாம் என்றார் பிரதமர்.
நாளை இந்த மாநாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
புறக்கணித்தார் மாயாவதி:
இந்த மாநாட்டை உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி புறக்கணித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications